திங்கள், 12 டிசம்பர், 2011

Living together



Living together, இந்த வார்த்தையைக் கேட்டாலே பொதுவாக பெற்றோர் வயற்றில் புளியைக் கரைக்கும் விதமாக இருந்தது. திருமணம் முன்பே ஆணும் பெண்ணும் சேர்ந்து சிறிது காலம் வாழ்ந்து விட்டு அதன் பிறகு திருமணத்தைப் பற்றி முடிவு எடுப்பதில் இந்தத் தலை முறை மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் . அது நம் இந்தியக் கலாச்சாரத்திற்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு சீர்கேட்டை  விளைவிக்க கூடியது என்பதை நாம் அறிவோம். அதனாலேயை அதனை ஊக்குவிக்க ஒருவரும் முன்வரவில்லை.

ஆனால் இதே வார்த்தை சமீப காலமாக மீண்டும் வழக்கத்திற்கு வந்துள்ளது. காரணம் தான் வேறு. 50 வயதிற்கு மேல் காலத்தின் கட்டாயத்தால் தனித்து விடப்பட்ட ஆண் , பெண் இதனை பின்பற்றலாமா என்று யோசிக்கத் தொடங்கி உள்ளனர். ஒரு விதத்தில் அதில் தவறு இல்லை. மீதி நாட்களை தனிமையில் கழிப்பதற்கு பதில் தன் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்துக் கொள்ளவும் தனிமையை போக்கவும் நட்பு என்ற முறையில் துணைக் கிடைத்தால் ஆரோக்கியமானது  தானே!! ஒரே கூரையின் கீழ் துணையுடன் அவரவர் விருப்பப் படி வாழ்வது மன அழுத்தத்தை குறைக்கவும் செய்யும். அந்த வயதில் நிறைய பக்குவம் அடைந்திருப்பதால் துணையை தேர்வு செய்வதில் குழப்பமும் அதிகம் இருக்காது.

ஒருவருக்கொருவர் கமிட்மென்ட் இல்லாத இத் தகைய வாழ்க்கை இந்த வயதில் சரிவரும் என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் முதியோர் இல்லங்களுக்கு போகத் தயங்கும் சிலருக்கு இது ஒரு வரப் பிரசாதமாக கூட அமையலாம். மற்ற ஆசாபாசங்களுக்கு இடம்  இன்றி நட்பு சார்ந்த ஒரு வாழ்க்கை அமையும் என்றால் அது வரவேற்க  பட வேண்டிய  ஒன்று. அதையும் தாண்டி செல்வது அவரவர் தனிப் பட்ட விருப்பம். மக்கள் மனோபாவம் மாறிக் கொண்டு வருகிறது .இதற்கு சில நாட்கள் முன்பு நடந்த நிகழ்ச்சியை ஒரு உதாரணமாக கூறலாம். ஒரு தனிப் பட்ட அமைப்பு 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு living patner தேர்வு செய்துக் கொள்ள ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர் .அதற்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு அமைப்பார்களே ஆச்சிரியப்பட்டுப் போனார்கள் .எதற்கும் ஒரு தொடக்கம் அவசியம்; அது நல்லதாக இருக்கும் பட்ச்சத்தில் ஊக்குவிப்பதில் தவறு இல்லை அல்லவா?

சனி, 3 டிசம்பர், 2011

80 வயதில் TWINS !!! சரியா !!!????


சில தினங்களுக்கு முன் செய்தித் தாளில் கண்ட அந்த செய்தியை படித்தவுடன் இது சரியா என்றக் கேள்வி மனதில் தோன்றியது. செயற்கை முறை கருத்தரிப்பில் ஒரு தம்பதியருக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பது தான்; இதில் என்ன அதிசயம் , ஆச்சரியம் என்கிறிர்களா? ஒன்றும் இல்லை, தந்தைக்கு 80 வயதும் தாய்க்கு 48 வயதும் தான்! (மெனோபாஸ் ஆனவர்) அதுவும்அந்தப் பெண்மணி அவரின் இரண்டாவது மனைவி!! நடந்திருப்பது வெளி நாட்டில் இல்லை; நம்ப தமிழ் நாட்டில் தான் ; இதற்கு அவர்கள் சொன்னக் காரணம் விநோதமானது.

சில வருடங்களுக்கு முன் 23 வயதான தங்கள் வாரிசை விபத்தில் பறி
கொடுத்ததால் தனிமை வாட்டியதாலும் இந்த முடிவு எடுக்கப் பட்டதாம். பொருளாதரத்தில் சாதாரண நிலையில் உள்ள இவ்வயது பெற்றோர் இந்த முடிவை எடுத்தது சரியா?  இன்று தங்கள் தனிமையை பற்றி யோசிப்பவர்கள் நாளை எவ்வளவு சீக்கிரம் அதே தனிமையில் தள்ளப் பட்டு ஆதரவு இல்லாமல் குழந்தைகளின்  எதிர் காலம் எவ்வளவு கேள்விக் குறி ஆகிவிடும் என்பதை ஏன் யோசிக்கவில்லை. இதில் இன்னொரு கவனிக்கப் பட வேண்டிய விஷயம் சம்பந்தப் பட்ட மருத்துவரின் அணுகு முறை .

குழந்தை வேண்டி இம்மாதிரி செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடி வருபவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப் படுகிறதா ? மேற் கூறிய சம்பவத்தைப் பார்க்கும் போது சந்தேகம் வரத் தான் செய்கிறது. தங்கள் திறமையை பரிசோதிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்ட மாதிரி அல்லவா தோன்றுகிறது. தார்மீக அடிப்படையில் வேண்டுமானால் அந்த மருத்துவர் செய்தது சரி என்றாலும் சமுதாயப் பொறுப்பிலிருந்து தவறி விட்டதாக தோன்றுகிறது.

இத்தனை வயதிற்கு மேல் அதுவும் பொருளாதரத்தில் பின் தங்கி இருக்கும் இவர்களால் குழந்தை பெற முடிந்தாலும் வளர்ப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துக் கூற ஏன் தவறி விட்டார்கள்? இது இவர்களுக்கு கூடுதல் சுமை தானே? நாளை அந்தக் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு யார் உத்தரவாதம்? உலக அறிவு அதிகம் இல்லாத அந்தப் பெற்றோருக்கு சரியான ஆலோசனையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த மருத்துவர் தவறி விட்டார் என்றே தோன்றுகிறது. தனிமையைப் போக்க வேறு எத்தனையோ வழிகள் இருக்க அதை செல்படுத்த முயற்சி  செய்திருக்கலாமே? அதற்கான முயற்சியைக் கூட செய்யவில்லை என்று பார்க்கும் போது மருத்துவர்களுக்கு  சமுதாய அக்கறை பற்றிக் கவலை இல்லையோ என்றுக் கேட்கத் தோன்றுகிறது. இத் தகைய செயல்களைக் காணும் போது சில மருத்துவர்களைக் கண்டு ஆச்சரியப் படுவதா இல்லைக் கோபப்படுவதா என்றே புரியவில்லை!!

திங்கள், 21 நவம்பர், 2011

லஞ்ச (மு)தலைகள் ...!!!!


லஞ்ச (மு)தலைகள் ...!!!!

ஒரு காலத்தில் சிறைக்குச் செல்லும் அரசியல் தலைவர்களின் பின்னணியில் மக்களுக்கான நியாயமான நலத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே இருந்தது.. சுய விளம்பரதிற்கோ, சுய லாபத்திற்கோ, முக்கியத்துவம் இல்லாத அவர்களது செயல் மக்களிடையே பெரும் மதிப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. சொத்துக் குவிப்பிற்கோ, வாரிசுகளின் எதிர் காலத்திற்கோ, அரசியல் தலைமையை கருவியாகப் பயன் படுத்த வில்லை; மக்களிடம் உண்மையான பற்றும் சேவை எண்ணமும் இருந்ததால், அத் தலைவர்களின் சிறைவாசம் மக்களின் மனதில் பெரும் பாதிப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. தன்னலமற்ற செயலால் மக்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடிந்தது. அதனால் தானோ என்னவோ அவர்களின் வாரிசுகள் யார், எங்கே இருக்கிறார்கள் என்று இன்று நம்மால் அடையாளம் கூட காண முடிவதில்லை.

ஆனால், இப்போதுள்ள அரசியல்வாதிகளும், தலைவர்களும் (?) அரசியலை ஒரு லாபகரமான வியாபாரமாக எண்ணித் தான் நுழைகின்றனர். எப்போது பணம் பிரதானமாகக் கருதப் படுகிறதோ அப்போதே இலவச இணைப்பாக லஞ்ச,ஊழலும் உள்ளே நுழைந்து விடுகிறது; இன்றும் தலைவர்களும்(?), வாரிசுகளும் அடிக்கடி சிறை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அதன் பின்னணி தலைக்குனிவை  தான் ஏற்படுத்துகிறது;  நம்பிய மக்களுக்கு அவர்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகம் கண்டு மனம் கொதித்து தான் போகிறது. இதனை கண்டு வருத்தமும், பரிதாபமும் படும் சிலர் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தானா என்று சிந்திக்க  வேண்டும். தலைவர்கள் (?) வாரிசுகளுக்கு சரியான வழி காட்டியாக இல்லாவிட்டாலும் தவறான பாதையில் செல்வதை தடுக்காமல் இருப்பதும் ஒரு வகையில் குற்றமே.

ஒருவரிடம் இருக்கும் அளவிற்கு அதிகமான பணமே லஞ்ச ஊழல் கைமீறி போனதிற்கு ஒரு காரணமாகிறது. லஞ்சத்தை ஒழிக்கவே லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப் பட்டு இருக்கிறோம். ஆனால் இன்னும் மக்கள் நம்பிக்கை இழக்க வில்லை; இதற்கு எப்படியும் ஒரு விடிவு பிறக்கும் என்று நினைத்து தான் ஓட்டுப் போட்டு வருகின்றனர். இன்றும் ஒரு சில கிராமங்களில் அந்தந்த வார்டுத் தலைவர்கள் போட்டி இன்றி தேர்ந்தடுக்கப் பட்டு தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்; மனது வைத்தால் மனசாட்சியுடன் செயல் பட்டு மக்களுக்கு ஊழல் இல்லாத வாழ்க்கையை அமைத்து தர முடியும் என்பதை உணர்த்தி உள்ளனர். சிறு துளி பேரு வெள்ளம் போல் அந்தந்த பகுதித் தலைவர்கள் இதனை  உணர்ந்து செயல் பட்டாலே கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிரண்டோடு நிற்காமல் மற்ற ஊராட்சி நகராட்சி எல்லாவற்றிக்கும் இந்த நிலை பரவ வேண்டும்.

புதன், 16 நவம்பர், 2011

மனதிற்கான Surf Excel !!!

ஒரு நாளைக்கு இருக்கும் நேரத்திற்கு ஏற்ப வேலைகளை அமைத்துக் கொள்ளும் என் போன்றோருக்கு கூடுதலாக 2 மணிநேரம் கிடைத்தால் விட்டுப் போன சில விஷயங்களை யோசிக்கலாம்; என் சிந்தனைக் கொஞ்சம் பின்னோக்கித் தான் சென்றது . உடைகளில் உள்ளக் கரைகளை surf excel கொண்டு நீக்கி விடலாம்; ஆனால் மனம் என்ற உடையில் ஏற்படும் காயம், வடு போன்ற கரைகளை இந்த மாதிரி அழிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த போது நம்முடைய அணுகுமுறையால் சாத்தியமே என்றுதான் தோன்றுகிறது.

நம்மால் யாரேனும் காயப் பட்டிருந்தால் அதைப் போக்குவதற்கான முதல் முயற்சியை எடுக்க வேண்டும். தொடர்பு சாதனங்கள் பெருகி உள்ள இந்தக் காலக் கட்டத்தில் யாரையும் சுலபமாகதேடி  அணுக முடியும். அதன் மூலம் சம்பந்த பட்டவரை அணுகி நம் தவறை உணர்ந்து எண்ணங்களை பரிமாறிக் கொண்டு பேச்சு வார்த்தை மூலம் அவர்களுக்கு நம்மால் ஏற்பட்ட காயம் என்றக் கரையை போக்க முயற்சி  செய்யலாம்.

அது போல் நமக்கு யாரிடமாவது பிணக்கோ, வருத்தமோ இருந்தாலும் "இன்ன செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் "என்ற குறளுக்கு ஏற்ப நடக்க முயலலாம். நாமே முன்வந்து அவர்களிடம் நேசத்தை வளர்த்து அவர்களுக்கு தேவையானதை செய்யத் தொடங்கினால் மனதில் ஏற்பட்ட காயம் என்ற கரை கொஞ்சம் கொஞ்சமாக மறைய வாய்ப்பு உண்டு! கிடைக்கும் அதிகமான 2 மணி நேரத்தில் இத் தகைய முயற்சியில் இறங்கினால் மனம் லேசாவதுடன் அன்பையும் நடப்பையும் வளர்க்க முடியும்.

இது வெறும் பேச்சுக்காக சொல்லப் படும் விஷயம் அல்ல;உண்மையிலேயே மனதை தூய்மை ஆக்கும் ஒரு உன்னதமான செயல். காலம் போய்க் கொண்டிருக்கும் வேகத்தில் மனிதபிமானத்துடன் செய்ய வேண்டிய விஷயத்திற்கு கூட இப்படி அதிகமாக 2 மணி நேரம் கிடைக்கும் போது தான் யோசிக்கத் தோன்றுகிறது!! இதற்கு யாரைக் குறை சொல்வது?

சனி, 12 நவம்பர், 2011

நண்பன்டா !!!!!!!


நண்பன்டா !!!!!!!

தொலைக் காட்சியில்  டாக்டர் கமலாசெல்வராஜ் அவர்களின் பேட்டியை சுவாரசியமாக முகுந்த் பார்த்துக் கொண்டிருந்தான். முதன்  முதலாக தன்னால் உருவாக்கப் பட்ட ,  சோதனைக் குழாய் மூலம் பிறந்தக் குழந்தையைப் பற்றி மிகவும் பூரிப்புடனும், பெருமையுடனும் இன்று தான் நடந்தது போல் கூறிக் கொண்டிருந்தார். முதல் காதல், முத்தம், வேலை,சம்பளம், என்று எதையுமே மறக்க முடியாதல்லவா?  அதைக் கேட்க கேட்க முகுந்திற்கு தன் உயிர்த் தோழன் கிருபாவின் நினைவு தான் வந்தது. நட்புக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்வார்கள், ஆனால் உண்மையில்  கொடுத்தவன் இந்த முகுந்தன். பேட்டியின் நடுவே தன் மனைவி பூமாவின் முகத்தை அடிக்கடி  நோக்கினான். அவளுள் உறுத்திக் கொண்டிருக்கும் விஷயத்தை தெளிவு படுத்த வேண்டிய தருணம் இது என்பதை உணர்ந்தான். அவளை அழைத்து முகுந்தன் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான். அதைக்  கேட்ககேட்க பூமா ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றாள். இப்படியும் ஒரு நட்பா என்று வியந்தாள். 

முகுந்தும், கிருபாவும் கல்லூரியில் சேர்ந்த  முதல் நாள் தான் ஒருவரை ஒருவர் முதலாக சந்தித்துக் கொண்டது. என்னக் காரணமோ, பார்த்த உடனே இருவருக்கும் பிடித்து விட்டது. கிருபாவின் அமைதியான சிரித்த முகமா, இல்லை முகுந்தின் குழி விழுந்த கன்னமா?  எதுவோ அன்று முதல் இருவரும் இணைப் பிரியா நண்பர்களானார்கள். இருவர் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் எல்லாப் பொறுப்பையும் ஏற்று நல்லபடியாக முடித்து தருவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. வீட்டில் உள்ளவர் எல்லோருக்கும் இவர்களின் நட்பு பற்றி பெருமை யாக இருந்தாலும் கடைசி வரை நீடிக்க வேண்டுமே என்ற கவலையும் கூடவே வரும். பாதி நட்பு திருமணத்திற்கு பிறகு தொடர்வதில் சிக்கல் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இரண்டு ஆண்கள் ஒத்துப் போவது போல், பெண்கள் ஒத்துப் போவது கொஞ்சம் அரிது தான்.

இருவருக்கும் எந்த விஷயத்திலும் மனக் கசப்போ, கருத்து
 வேறுபாடோ வந்தது இல்லை. பண விஷயத்திலும், ஒருவர் குடும்பத்திற்கு ஒருவர் செலவு செய்தாலும் ஏன், எதற்கு என்று கேட்க மாட்டார்கள். இதில் மற்றவர்கள் தலையிடையும் அனுமதிபதில்லை. திருமண விஷயத்தை  இருவரும் மிகவும் கவனமாக கையாள நினைத்தார்கள். தங்கள் நட்பை மனைவி, இயல்பாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினர். பலவந்தத்தினால் வருமே ஆனால் அதில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு.
க்ருபாவிற்கும் கீர்தனாவிற்கும் மூன்று வருடப் பழக்கம். முகுந்திற்கு மட்டும் இவர்களின் பழக்கம் தெரியும். கீர்த்தனா  முதலில் இவர்களின் நட்பை சாதரணமாக தான் நினைத்தாள். போகப் போக நட்பின் ஆழத்தை புரிந்துக் கொண்டு பக்க பலமாக இருந்தாள். முகுந்தும், கிருபாவும் தங்கள் திருமணம் சேர்ந்து நடக்க விருப்பப் பட்டாலும், முடியாமல் கீர்த்தனாவின் வீட்டு சுழலால், உடனே செய்து கொள்ள வேண்டியதாகிவிட்டது. கிருபாவின்  திருமண வாழ்கை நாளொரு காதலும், பொழுதொரு ஊடலுமாக, சந்தோஷமாக இருந்தது. கிருபாவின் பெற்றோர்களும் அவர்களின் தனிமையின்  அவசியம் புரிந்து தங்கள் மகளிடம் சிறுது காலம் கழிக்க சென்றனர்.முகுந்தும் எப்போதும் போல் வந்து போய்க் கொண்டிருந்தான். அவர்கள் முவரும் சேர்ந்தால் அங்கு கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை. வேலை விஷயமாக கிருபா 3 ,4 நாட்கள் வெளியூர் போனாலும் முகுந்த் வீட்டிற்கு வருவது தவறாது. வழக்கம் போல சில பேர் ஏதேனும் பின்னாடி பேசினாலும், அது பற்றி கவலைப்  படாமல் இவர்கள் நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

அன்று அலுவலக வேலையாக கிருபா தன் நண்பனுடன் வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது எதிபாரவிதமாக லாரி மோதி விபத்தில் தூக்கி எறியப் பட்டான். நல்ல வேளையாக அருகில் உள்ளவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். முகுந்துக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. அதிஷ்டவசமாக  பெரிய வெளிக் காயம் எதுவும் இல்லை.முகுந்த் கூடவே இருந்து கீர்தனாவிற்கும் தைரியம் சொல்லி, தேவையான எல்லாம் செய்து கிருபா நன்றாக தேறும் வரை உடன் இருந்தான். ஆனால் இந்த விபத்து இரு நண்பர்களின் வாழ்வை புரட்டிப் போட்டது என்றால் மிகை ஆகாது.
விபத்திற்கு பிறகு கிருபா எப்போதும் போல் இல்லை என்பதை முகுந்த் உணர்ந்தான். கண்டிப்பாக அவனை வாட்டிக் கொண்டிருப்பது  சாதாரண விஷயம் இல்லை என்று மட்டும் புரிந்தது. அவனாக சொல்லட்டும்  என்று காத்திருந்தான். கிருபா தன் மனதிற்குள் ஒரு பட்டி மன்றமே நடத்தி, தீர்வுக்கு வந்து முகுந்தை நாடிச் சென்றான். கிருபா,"முகுந்த், நான் இப்போக் கேட்கும் இந்த உதவியை முழு மனதோடு எந்தவித மறுப்பும் இல்லாமல் செய்ய வேண்டும், சரியா?".முகுந்த்," ஏண்டா இப்படி, என்ன வேணும் கேளு; ஏன் இவ்வளவு தயக்கம்." "முகுந்த், எனக்கு நடந்த விபத்தில் நான் இழக்க கூடாததை இழந்து விட்டேன்; என்னால் இனி கீர்த்தனாவிற்கு ஒரு குழந்தையை தரும் தகுதிக் கிடையாது."என்றான். "ஐயையோ என்னக் கொடுமை இது!!" "ஆமாம், என்னாலும் தான் தாங்க முடியவில்லை; அதற்காக இப்படியே விட்டு விட முடியாது; உனக்கேத் தெரியும் கீர்த்தனவிற்கு குழந்தை என்றால் எவ்வளவு உயிர் என்று; தாய்மையை எவ்வளவு விரும்புபவள் ; என்பொருட்டு அவள் அந்த அனுபவத்தை இழக்கக்  கூடாது." முகுந்த்,"கண்டிப்பாக. அப்போ நீங்கள் குழந்தையை தத்தெடுப்பது பற்றி யோசிக்கலாமே, இப்போது இதல்லாம் பெரிய பிரச்சனை இல்லை." என்றான் முகுந்த். கிருபா,"இல்லை குழந்தை சுமக்கும் அனுபவத்தை அவள் பெற வேண்டும்," முகுந்த்,"நீ என்ன சொல்ல வர எனக்குப் புரியலே" கிருபா,"நீ...உன்னுடைய விந்தை எங்களுக்கு தானமாக தர வேண்டும்; உன் மாதிரி ஒரு குழந்தையை பெற நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் "என்றான். முகுந்த்,"ஏய் நீ தெரிந்து தான் பேசுகிறாயா? கீர்த்தனா இதை எப்படிப் பார்ப்பாள் என்று யோசித்தாயா "? கிருபா,"அதைப் பற்றி நீ கவலைப் படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றான்.

விஷயம் கேள்விப் பட்டு கீர்த்தனா கட்டுப் படுத்த முடியாமல் அழுதாள். கிருபா அவளிடம் இதையே நினைத்து கலங்காமல் அடுத்து செய்ய வேண்டியதையும், அது விஷயமாக தான் எடுத்திருக்கும் முடிவையும் கூறினான். அதிர்ச்சி அடைந்த கீர்த்தனாவை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி சம்மதிக்க வைத்தான். அதற்கு பின் மருத்துவர் யோசனை படி விஷயம் வேகமாகவும்,மும்மரமகவும் நடக்க ஆரம்பித்தது. வீடு, தங்கம், விலைஉயர்ந்த பொருட்கள் இதையெல்லாம் வாங்கும் போது தான் சந்தோசம். ஆனால் அன்பு, பாசம், நட்பு, கல்வி, இதையல்லாம் கொடுப்பதில் தான் அதிக சந்தோசம். இதை உணர்வு பூர்வமாக உணர்ந்த முகுந்த் மிகவும் மகிழ்ந்தான். இதற்கு நடுவில் முகுந்திற்கும் கல்யாணம் நிச்சயமாகியது. பூமாவும், கீர்த்தனாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆனதால் இவர்களின் நட்பு மேலும் பலமானது.
கீர்த்தனாவிற்கு, 2,3 சோதனைக்குப் பிறகு பலன் கிடைத்தது. முகுந்த் திருமணம் போது அவளுக்கு மூன்று மாதம். எல்லோரும் மகிழ்ச்சியல் திளைத்தனர். இவர்களின் அதீத நட்பைப் பற்றி பூமாவிடம் சிலர் தவறாகப் பேசினாலும் அதைப் பொருட் படுத்தாமல்,சந்தோஷமாக வளைய வந்தாள். இவர்களின் நட்பு நாளுக்கு நாள் இறுக்கமானது. குழந்தை பேருக்கு கீர்த்தனா பெற்றோரிடம் சென்றாள்.


குழந்தை பிறந்து மூன்று மாதம் கழித்து கீர்த்தனா கிருபாவிடம் வந்து  சேர்ந்தாள். குழந்தை வளர வளர குழி விழுந்த கன்னமும், கண்களும், நிறைய முகுந்தின் ஜாடையுடன் ஒத்து போவது பற்றி, சுற்றி இருப்போர் பலவிதமாக பேச ஆரம்பித்தனர். அதைப் பற்றி நண்பர்கள் கவலைப் படாவிட்டாலும், பூமாவிற்கு காரணம் விளங்கவில்லை. சந்தேகம் இல்லாவிட்டாலும், குழப்பத்துடனே வளைய வந்தாள். இன்னும் கொஞ்ச நாளில் வரும், குழந்தையின்  முதல் பிறந்த நாள் ஏற்பாட்டில் முழமையாக ஈடு பட முடியவில்லை. அப்போது தான் முகுந்த் தங்கள் மூவருக்கு மட்டும் தெரிந்த   ரகசியம் பூமவிற்கும் தெரிய வேண்டும் என்று உணர்ந்தான். அவளிடம் ஆரம்பம் முதல் என்ன நடந்தது என்பதைக் கூற தொடங்கினான். இப்படி ஒரு உன்னதமான நட்பை நினைத்து பூரித்தவள், தன் கணவனை பெருமையுடன் நோக்கினாள். மனம் லேசாகிப் போக, உற்சாகமாக விழாவிற்கான ஏற்பாட்டினைக் கவனிக்கத் தொடங்கினாள்.

வியாழன், 10 நவம்பர், 2011

KBC ஒரு திருப்புமுனை!!


 சில நிகழ்வுகளும் சம்பவங்களும் திரைப் படங்களிலும் , கதைகளிலுமே சாத்தியம். உதாரணமாக சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் ஒரே பாடலிலோ அல்லது 4,5 காட்சிகளிலோ கோடீஸ்வரக  ஆவதை பார்த்திருக்கிறோம். அது மாதிரி நடைமுறை வாழ்க்கையில் சாத்தியம் என்பதைக் KBC என்ற நிகழ்ச்சி நிருபித்துள்ளது. மாதம் 6000 சம்பளத்தில் இருந்த சுஷில் குமார் 13 கேள்ளிவிகளுக்கு பதில் அளித்ததின் மூலம் இன்று 5 கோடிக்கு அதிபதி ஆகிவிட்டார். இது அவர் கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

வெற்றிப் பெற்றபின் அவர் முகத்தில் தெரிந்த அதிர்சிக் கலந்த சந்தோஷமும் அதை தன் மனைவியுடன் சுற்று சுழலை மறந்து பகிர்ந்துக் கொண்ட விதமும் உண்மையிலேயே மனதை நெகிழச் செய்தது. ஒரு சாதாரண மனிதனை இந்த நிலைக்கு உயர்த்திய அந்த நிகழ்சியை பாராட்டத்தான் வேண்டும். இது அதிஷ்ட்டத்தை நம்பி இல்லாமல் அறிவுபூர்வமாக நடத்தப் படும் நிகழ்ச்சி ஆகும். இதற்கு நிறைய புத்தகங்கள் மூலமாகவும், மற்ற ஊடகங்கள் வாயிலாகவும் தகவல்கள் சேகரித்து தயார் படுத்திக் கொண்டால் தான் அந்த இருக்கையில் அமர முடியும்;  நிறைய உழைப்பும், விடா முயற்சியும் தேவை. எல்லாம் இருந்தும் இந்த நாற்காலியில் அமர்ந்து, நினைவில் வைத்துக் கொண்டு பதில் கூறுவது சாதாரண விஷயமில்லை. ஒரு சிறு கிராமத்திலுருந்து அதிகம் வெளிஉலகை அறியாதவர் சாதித்திருப்பது உண்மையிலேயை  பெருமை பட வேண்டிய விஷயம்.இதையேமுன் உதாரணமாகக் கொண்டு நாளை நிறைய சுஷில் குமார் உருவாக வாய்ப்புண்டு. இவர்களுக்கு பணத்தின் தேவையும்,  மதிப்பும் உணருவதால் சாதிக்கும் உத்வேகமும் அதிகம்.

இதே நிகழ்ச்சியில் பலமான பொருளாதாரமும் கல்விப் பின்னணியும் கொண்ட பெண்மணி பொழுது போக்காக கலந்துக் கொண்டு ஒரு சாதாரணக் கேள்விக்கு பதில் தெரியாமல் 50 லட்சத்தை இழந்த போது அவருக்கும் சரி நமக்கும் பெரிய வருத்தம்  ஒன்றும்   ஏற்படவில்லை .ஆனால் இந்த சாதாரண மனிதனுக்கு கிடைத்த தொகை எல்லோரையுமே மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது என்றால் மிகையாகாது .இம்மாதிரி நிகழ்ச்சி ஒருவரது வாழ்க்கைக்கே திருப்பு முனையாக இருக்குமே ஆனால் அதை வரவேற்பதில் தவறு ஒன்றும் இல்லை.

நிற்க. TRP rating மனதில் கொண்டு இது ஒரு set up நிகழ்ச்சியாக இருக்காது என்று நம்புவோமாக!!!

வெள்ளி, 4 நவம்பர், 2011

கிரிக்கெட் T(party)20 !!!



இந்தியர்களுக்கு மற்ற விளையாட்டை விட கிரிக்கெட்டில் உள்ள ஆர்வமே தனி. இங்கிலாந்தில் வாங்கிய அடிக்கு இங்கு முழுமையாக திருப்பிக் கொடுத்ததில் தான் எவ்வளவு திருப்தியும் மகிழ்ச்சியும்! அன்று இந்திய வீரர்களைப் பற்றி அவ்வளவு பேசிய நாசர் ஹுசைன் இப்போ எங்கே போனார்? ஆனால் இவ்வளவு ஆராவரத்திற்கும் கொண்டாட்டத்திற்கும் இப்போதைய கிரிக்கெட் தகுதி தானா என்பது யோசிக்க வேண்டிய விஷய மாகிவிட்டது.

எப்போ விளையாட்டை விட பணம், சூதாட்டம் அதிகம் முக்கியத்துவம் பெற்றதோ அப்போதே கிரிக்கெட் தரம் குறைந்து தான் போய்விட்டது. ஒரு காலத்தில் கிரிக்கெட் ஒரு gentlemen game என்று அழைக்கப் பட்டது. ஆனால் புல்லுருவி போல் பணம் உள்ளே  நுழைந்ததால் நாம் நல்ல விளையாட்டை மட்டும் இன்றி நல்ல வீரர்களையும் அல்லவா இழந்து விட்டோம். எரியும் நெருப்பில் எண்ணை விடுவது போல் இந்த T.20 தொடரினால் கிரிக்கெட் ஒரு வியாபாரமாகவே ஆகிவிட்டது என்றால் மிகையில்லை. ஆட்டத்துக்கும் பார்ட்டிக்கும் உள்ள முக்கியத்துவம் விளையாட்டுக்கு இல்லை!! மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது!! ஆனால் அந்த மாற்றம் வளர்வதற்குத் துணைப் போக வேண்டுமே அன்றி தரக் குறைவிற்கோ, தாழ்விற்கோ காரணமாகக் கூடாது.

இந்த T.20 முன்னேற நினைக்கும் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாம்; பல நாட்டு வீரர்களுடன்கலந்து விளையாடுவதால்  தத்தம் பலம்,  பலவீனங்களை அறிந்து சில நுணுக்கங்களை பகிர்ந்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் விளையாடும் போதுக் கிடைக்கும் பேரும் புகழும் குறுகிய காலத்திற்குத் தான். ஒரு திறமையை வெளிக் கட்டவோ அல்லது கிரிக்கெட்டில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கவோ கண்டிப்பாக இந்த T.20 முறை உதவாது. இந்த முறையில் பிரகாசிப்பவர்கள் டெஸ்ட் மாட்சில், ஒரு நாள் போட்டியில் நிலைத்து விளையாட முடியாமல் போகிறது. துரித உணவு போல் கிரிக்கெட்டிலும் துரிதத்தைதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்என்ற பழியை போட்டு  இத் தகைய போட்டிகளை நடத்துவது அதிகமாகி விட்டது.

டெஸ்ட் போட்டி அதிகம் நடத்துவதன் மூலம் தான் திறமை சாலிகளை உருவாக்க முடியும்; தரமான விளையாட்டையும் காண முடியும். இதில் என்ன மாற்றம் செய்தால் ரசிகர்களை கவர முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். பணத்திற்கும் வியாபாரத்திற்கும் விளையாடும் இந்தப் போக்கு மாற வேண்டும். இதனால் இன்று அதிகம் பாதிக்கப் பட்ட பாகிஸ்தான் அணியைப் பார்க்கும் போது எல்லா ரசிகர்கள் மனமும் வேதனைத் தான் அடைகிறது. என்ன இருந்தாலும் இந்திய பாகிஸ்தான் போட்டிப் போல் வருமா? தேர்வாளர்களும் அரசியல் கலக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நல்லப் பயிற்சித் தளங்களை உருவாக்கி சிறந்த வீரர்களையும் உருவாக்க பாடு  பட வேண்டும்.

திங்கள், 31 அக்டோபர், 2011

ஆண் (நட்பு) பெண்....!!!!




நாம் பொதுவாக சில விஷயங்கள், உறவுகளை, பொருட்களை விலை மதிப்பிட முடியாது. அப்பேர் பட்ட விஷயங்களில்  நட்பிற்கும் என்றுமே  ஒரு தனி இடம் உண்டு. அதிலும் அபூர்வமாக அமையும் உண்மையான ஆண் பெண் நட்பானது மிகவும் விலை மதிப்பில்லாதது. புராணக் காலத்திலிருந்து இன்று வரைஅத் தகைய நட்பு தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. மகாபாரதத்தில் ஒரு சம்பவம்; கர்ணனும் துரியோதனன் மனைவியும் விளையாடிக் கொண்டிருக்கும்  தருணம் இடையே கணவன்  துரியோதனன் வருவதை அறிந்து மனைவி எழ, அறியாத கர்ணன் பாதி ஆட்டத்தில் எழும் தன் நண்பியை தடுக்க, அவள் ஆடையிலிருந்து முத்துக்கள் சிதற துரியோதனன் அதைக் கண்டு ,"எடுக்கவோ, கோர்கவோ" எனக் கேட்கும் சொல் ஆண் பெண் நடப்பினை புரிந்துக் கொண்டதற்கான சிறந்த எடுத்து காட்டாக இன்று வரை சொல்லப் படுகிறது.

அது போல் ஆரோக்கியமான நட்பு இன்று பரவலாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இதன் ஆயுட்காலம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்டக் காலம் வரை அதாவது திருமணம் வரை தான் தொடர முடிகிறது. அதற்கு மேல் தொடர தடையாக இருப்பது, கணவன், மனைவி மனோபாவமா, குடும்பமா, இல்லை சமுதாயமா புரியவில்லை. நாம் தயக்கமோ  எதிர்பார்போ இல்லாமல் எந்த விஷயங்களையும் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும்; மன அழுத்தம் குறைவதோடு ஆறுதலையும் தெளிவையும் பெற முடியும். என் அனுபவத்தில் இம்மாதிரி நட்பினால் கணவன் மனையிடையே ஏற்படவிருந்த இழப்பு தவிர்க்கப் பட்டு பலமான உறவு அமைய வழி செய்தது. பெரியவர்களும், கணவன் நட்பை மனைவியும், மனைவி  நட்பைக் கணவனும் சரியாகப் புரிந்துக் கொண்டு  ஆரோகியமான நட்பை ஊக்கப் படுத்த வேண்டும். 

தம்பதிக்குள் சிறு சிறு பிரச்சனையோ, புரிதல் இன்மையோ ஏற்பட்டால் இத் தகைய நண்பன், நண்பி மூலம் தெளிவு படுத்தி சரி செய்வது சுலபம். நண்பர்கள் மூலம் சரியானக் கோணத்திலிருந்து தீர்வுகள் அலசப் பட்டு சரி செய்யும் வாய்ப்புகளும் அதிகம். நண்பர்கள் சில விஷயங்கள் சொல்லும்  போது தயக்கம் இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். வீட்டுப் பெரியவர்கள் உறவினர்களால் சாதிக்க முடியாததைக் கூட இத்தகைய நட்பு சாதிக்கும் என்பதி ஐயம் இல்லை. எனவே சரியான புரிதலுடன் இத்தகைய நட்பு கடைசி வரை தொடர வேண்டும் என்பதே அவா.

திங்கள், 24 அக்டோபர், 2011

பொண்ணு பார்க்க .....





பூமா அன்று காலையிலிருந்து படபடப்பாகவும் எல்லாம் நல்ல படியாக  முடிய    வேண்டுமே  என்றும்    நினைத்தாள். இருந்தாலும் அப்பப்போ  வயற்றில் மீன் துள்ளித்துள்ளி விளையாடியது .(அது என்ன எப்பபாரு  பட்டாம் பூச்சி  பறக்கிறது..} இன்னிக்கு அகில் பூமாவின் மகன் சுகந்த்கு பெண்  பார்க்க போகிறார்கள் .சுகந்தும் அஞ்சனாவும்   ஒரு  வருஷமா நன்றாக பழக்கம். பொண்ணு பார்க்க என்று  சொல்வதற்கு பதில்  சம்பந்தி பார்க்க என்று சொல்வது தான் சரி.

பூமாக்கு.தன்னை   பெண் பார்க்க வந்த நாள்  நல்ல ஞாபகம் வந்தது.பூமா குடும்பம் ஒரு  கட்டுப்பட்டியானது. ஜாதகம் பார்பதே  சொல்லமாட்டார்கள் . எல்லாம் ஒரு மௌன நாடகமாகவே  இருக்கும் ..இவளும் அதை மனதுக்குள் ரசிப்பாள். திடீரென்று  மாப்பிளை வருவதாக அன்று காலை தான் சொன்னார்கள். .என்ன படிப்புவேலைஒரு போட்டோ மூச் எதுவும் சொல்லவில்லைஅகில் , வந்தவுடன் ஒரு பேப்பர்   வைத்து முகத்தை மூடியவர்தான் ,ஏதோ அதிலிருத்து   தான் கேள்வி  கேட்க  போகிற மாதரி  மூழ்கி விட்டார் .ஏதோ தம்பியும் அம்மாவும் பார்க்க   நல்ல இருந்ததால் மனதில்  பாரத்தை  போட்டு பூமா சரி என்று சொன்னாள்.  ஆனால் அகில் உண்மையிலே ரொம்ப  நல்ல மாதிரிபேப்பர் விஷயத்தை கவனித்தது தனி கதை.

பூமாஅகில்சுகந்த் மூவரும்  சரியான டைம்க்கு கிளம்பி அஞ்சனா வீடு  போனார்கள் . என்ன அதிசியம் ! அஞ்சனா தான் எல்லோரையும்  உபசரித்து  அமர  செய்தாள், இரு குடும்பங்களயும் அஞ்சனாவும்சுகந்தும் அறிமுகம் செய்து விட்டு இரண்டு பேரும்  வாசலுக்கு போய்விட்டார்கள்.  இவர்களும்.  ஒரு  மாதிரி ஆரம்ப  கூச்சம் எல்லாம் போக சகஜமாக பேசி ,கல்யாணம் பற்றி ஒரு நல்ல முடிவுக்கு  வந்தார்கள்இது தான் இன்றைய  நடை முறை! . இதை புரிந்து கொண்டு நடந்தால் இந்த தலை முறையோடு  பெற்றவர்களுக்கு  நல்ல உறவு பாலம் அமையும் .

வெள்ளி, 21 அக்டோபர், 2011

உறவில் திருமணம் ....ஒரு ஷொட்டு!!!



ஒரு காலத்தில் உறவில் திருமணம் என்பது நம்மிடையே அதிகம் காணப்பட்டு வந்தது. பின் விஞ்ஞானரீதியாக உறவுத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளிடம் சில குறைபாடுகளும், பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்ற கருத்து வைக்கப் பட்டதால் அத்தகைய திருமணம் படிப் படியாக குறைய ஆரம்பித்தது. இது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், இதனால் சில நல்ல விஷயங்களையும்  இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.

இன்றைய உறவுகள் சங்கிலித் தொடர் போல் இல்லாமல் சிறு சிறு தீவாகக் காணப்படுகிறது. உறவில் திருமணம் குறைந்தது கூட இந்நிலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சொத்துக்காக மட்டும் இன்றி பலமான உறவு பாலத்திற்கும் உறவில் திருமணம் பெரிதும் துணை புரிந்ததை மறுபதற்கில்லை. புகுந்த வீடும், பிறந்த வீடும் ஒன்றுக்குள் ஒன்றாகி இருந்ததால், திருமணம், பண்டிகை, மற்ற முக்கிய  தினங்களில் எல்லோரும் பொறுப்புகளை பகிர்ந்துக் கொள்வதுடன், மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆசையுடனும் கலந்துக் கொண்டு உறவின் பெருமையை மேம் படுத்தினர். தம்பதிகள் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடோ , பிரச்சனைகளோ வந்தாலும் பாதிப்பு எல்லோருக்குமே என்பதால், அதிகம் வளரவிடாமல் விரைவிலேயே தீர்வும் காணப் பட்டது. உறவின் மதிப்பும் பலமும் உணரப் பட்டது.

இன்று குடும்பத்தின்  வெளியே திருமணம் , அதையும் தாண்டி ஜாதி மதம் பாராமல் செய்யப் படுவது ஒரு வகையில் ஆரோக்கியமாக இருந்தாலும் உறவுகள் மேம் பட அது கட்டாயம் துணைப் புரிவதில்லை. மேலும் திருமணம் போதும் மற்ற விசேஷ நாட்களிலும் அந்தந்த உறவிற்கான , மாமா, அத்தை பாட்டன், பாட்டி, பெரியப்பா, சித்தப்பா இவர்களுக்கான முக்கியத்துவம் பிரதானமாகக் கருதப் படுவதில்லை. நெருங்கிய சொந்தங்களிடமும்  ஒரு ஈடுபாடில்லாமல் கலந்துக் கொள்வதுடன் ஒரு தயக்கத்துடன் கூடிய அந்நியத் தன்மை தான் காணப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சிலக் குடும்பங்களில் யார் யார் தங்கள் உறவு என்றுத் தெரியாமலே இருக்கின்றனர். 

முன் போல் எல்லோ உறவுகளோடும் அன்னோன்னியமாக இருக்க முடிவதில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது. இதற்காகவேனும் உறவில் திருமணம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் ஏங்கத் தான் செய்கிறது .

புதன், 19 அக்டோபர், 2011

ரியாலிடி ஷோ .... தேவை ஒரு தணிக்கை !!!!



இன்று தொலைக் காட்சியில் எந்த சேனலைப் பார்த்தாலும், ரியாலிடி ஷோ என்ற பேரில் நடக்கும் போட்டிகளின் தாக்கம் தான் அதிகம் காண்கிறோம். இது போட்டி என்றக் கட்டத்தை தாண்டிஅதிகம், ஒரு உணர்ச்சிமயமான நாடகமாகத் தான் நடத்தப் படுகிறது. இதற்கு சொல்லப் படும் காரணம் T.R.P rating. இது எப்போ யார் மூலம் எடுக்கப் படுகிறது என்பது சம்மந்த பட்டவற்கே வெளிச்சம். பொழுது போக்கோ, இல்லை திறமையை வெளிப் படுத்தும் நிகழ்ச்சியானாலும் எதற்கும் ஒரு வரையறை இருத்தல் அவசியம். சில நாட்கள் முன்ஒரு சேனலில்  எதேச்சையாகப் பார்த்த ஒரு நிகழ்ச்சி என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது .

நம் சமுதாயம் எதை நோக்கிச் சென்றுக்  கொண்டிருக்கிறது? இது என்ன மனிதத்தன்மையே இல்லாத ஒரு நிகழ்ச்சி !! விஷயம் இது தான்; ஆணோ, பெண்ணோ தன்னை ஏமாற்றிய காதலன் இல்லை காதலியை எந்த விதத்தில் பழி வாங்கவோ, பொது இடங்களில் அசிங்கப்  படுத்தவோ விரும்பினால்  இந்த பிரசித்திப் பெற்ற சேனலை அணுகலாம். அதற்கு தேவையான  நடிகர்கள், கதை படப் பிடிப்பு எல்லாம் ஏற்பாடு செய்து நடத்திக் கொடுக்கின்றனர். அந்தப் பழைய காதலன், காதலி எப்படி அசிங்கப் பட்டார்கள் என்பதை படமாக்கி, ஒரு நிகழ்ச்சியாக ஒளிப் பரப்புகிறார்கள். அவமானப் படுபவர்கள் ஏதேனும் விபரீத முடிவை எடுத்தால் என்னாவது? என்ன கொடுமை இது!! தாங்கள்  ஏமாற்றப் பட்டதை இப்படி உலகம் முழுக்கப் பறை சாற்றப் படுவதால் அவர்களின் நடத்தையும் தவறாக பேச வாய்ப்பு உண்டு என்பதை எப்படி மறந்தார்கள்? பழிக்கு பழி வாங்கும் இத்தகைய செயலை அந்த குறுப்பிட்ட சேனலும் எப்படி ஊக்குவிக்கின்றது என்று புரியவில்லை. தீவிரவாதம், கொலை  ,பழிவாங்குதல் போன்றவை அதிகரித்து வரும் தருணத்தில் இம்மாதிரி நிகழ்ச்சி தேவையா?

நாளை ஒருவர், எனக்கு இந்த மனிதனையோ உறவையோ பிடிக்கவில்லை, அவர்களை இந்த உலகிலிருந்து விலக்க வேண்டும் என்று வந்தால் அதையும் T.R.P rating என்ற பெயரில் செய்வார்களோ? ஒருவரோடு ஒத்துவரவில்லை, பிடிக்க வில்லை என்றால் விட்டு ஒதுங்குவது தான் சிறந்தது. இம்மாதிரி பழிவாங்குவது ஒரு தற்காலிக  மகிழ்ச்சியாக இருக்குமே அன்றி ஆரோக்கியமான செயலாக இருக்காது. அதனால் மனதிற்கு நிம்மதியும் கிடைக்காது. இதை ஈடு செய்யவோ என்னவோ அதே  சேனல் பெற்றோர்களால் சிக்கல் ஏற்படும் காதல் திருமணத்தை சமரசம் செய்து காதலர்களை இணைக்கும் முயற்சியும் செய்கின்றனர்.

எல்லோராலும் பரவலாகப் பார்க்கப் படும் தொலைக்காட்சி , ஒரு பலம் வாய்ந்த ஊடகம். வெகு விரைவில் மக்களை சென்றடையும் சாதனம். இதன் மூலம் நல்ல விஷயங்கள் சொல்லப் படுகிறதோ இல்லையோ தவறான செயல்களை, சிந்தனைகளை கொள்கைகளை சிறு சதவிதம் கூட பரப்ப துணை போதல் கூடாது. இத்துறை சமுதாய அக்கறையுடன் செயல் பட வேண்டும். தயவு செய்து இத் தகைய நிகழ்சிகளை ஊக்கப்  படுத்த வேண்டாம்.


வெள்ளி, 14 அக்டோபர், 2011

கூடா(ங்)த குளம் !!!

கூடா(ங்)த குளம் !!!

கூடாங்குளம் இன்று தமிழ் நாட்டில்  எல்லோராலும் மெல்லப் படுகின்ற அவலாகி விட்டது. அங்குள்ள மக்கள் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிராக நடத்தி வரும் போராட்டம், மற்றவர்களை அவர்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்பதை மறுபதற்கில்லை. ஆனால் இது குறித்து சில கேள்விகள் பாழும் மனதில் எழத்தான் செய்கிறது.

1.இன்று இவ்வளவு தீவிரமாக எழுந்திருக்கும் போராட்டம் அடிக்கல் நாட்டும் போதே நடத்தி இருந்தால் கால விரயமும், பண விரயமும் தடுக்கப் பட்டிருக்கலாம்.
2. இத் திட்டத்தை பற்றிய சரியான விழிப்புணர்வும் தெளிந்த சிந்தனையும் அப்பகுதி மக்களை சென்றடைய வில்லையோ?
3.சில அரசியல்வாதிகளும், கட்சிகளும்தங்களின் சுய விளம்பரத்திற்காக  அப்பாவி மக்களை தங்கள் கை பொம்மைகளாகப் பயன் படுத்துகின்றனரோ?

ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கருத்தைக் கூற உரிமை உண்டு. அது போல் அரசாங்கமும் மக்கள் நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் அனுமதி  வழங்கி இருக்காது. மேலும் கல்பாக்கத்தை விட கூடுதல் பாதுகாப்புக் கொண்டு கூடாங்குளம் அமைத்திருப்பதை சம்மந்த பட்டவர்கள் கூறுகிறார்கள். ஒரு வேளை இதன் பலன், பாதுகாப்பு,மற்ற விவரங்கள் மக்களை சரியாகச் சென்றடைய வில்லையோ? எப்போது மக்களுக்கு தங்கள் வாழ்வு, பாதுகாப்பு பற்றிய பயம் இத் திடத்தினால் ஏற்படுகிறதோ அதை போக்குவது தான் சம்மந்த பட்டவர்களின் முதன்மையானக் கடமை ஆகும். இல்லையனில், மக்களின் அறியாமையை சாதகமாகக் கொண்டு சிலர் அரசியல் சாயம் பூசி முடக்க வாய்பு உண்டு.
இத் திட்டத்திற்காக பல ஆயிரம் கோடி செலவிடப் பட்டுள்ளது; எல்லாம் மக்கள் பணமே; இது கை விடப் பட்டால் பணம், நேரம் விரயமாவதுடன், இங்கு வேலை செய்ய எடுக்கப் பட்டவர்களின் நிலை என்னாகும் என்று தெரியவில்லை! வீணாக்கப் பட்ட எங்கள் பணத்திற்கு என்ன பதில் என்று ஒரு சாரர் போராட்டம் தொடங்கினால்? அதற்கும் இதே கட்சியும் அரசியல்வாதிகளும் துணைப் போனால் ஆச்சரியப் படுவதற்கில்லை. எந்த ஒரு திட்டத்தின் பலனும் மக்களிடம் சரிவர சென்றடைந்தால் தான் அமல் படுத்த முடியும்.எந்த வித குறுக்கீடும் இல்லாமல் மக்களிடம் நேரடியான பேச்சு வார்த்தை நடத்தி சரியானக் கோணத்தில் தெளிவு படுத்த வேண்டும். மக்களும் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்;தங்களின் பலவீனக்களையும் அறியாமையையும் சாதகமாகக் கொண்டு பேசுபவர்களின் சொல்களையும்,செயல்களையும் கண்மூடித் தனமாக பின்பற்றுவதை விட்டொழிக்க வேண்டும்.
சுயமாக சிந்தித்து உண்மையிலே நல்லத் திட்டமாக இருந்தால் இழப்பீட்டையும்,சலுகைகளும் கூடுதலாக பெற வேண்டி போராடலாம். ஆனால் திட்டத்தேயே கைவிட வேண்டும் என்று அதுவும் செயல் படுத்தும் தருணம் முட்டுக் கட்டை போடுவது சரியாய் என்று தெரியவில்லை.

திங்கள், 10 அக்டோபர், 2011

சுமையிலும் ஒரு சுகம் !!!

கதிரவன் முழுமையாக விழிக்கும் முன் பூங்காவில் மேற் கொள்ளும் நடை பயணம் ஒரு சுகமான அனுபவம். அதை விட அருகில் நடைபயில்பவர்களின் உரையாடலை காதில் வாங்கிக் கொண்டே நடப்பது கூடுதல் சுவாரசியம். எல்லா விஷயங்களும் அரசியல், சொந்த அனுபவம், கிசு கிசு எல்லாம் அலசப்படும். சில விஷயங்களை புதுக் கோணத்தில் பார்கக் கூடிய வாய்ப்பையும் தருகிறது. அது போல் கேட்ட விஷயம் தான் இம்மாதிரி எழுதத் தூண்டியது.

இன்று இந்தியாவின் எல்லாப் பகுதிலிருந்தும், தெருவிற்குப் பத்து வீடு இருந்தால் அதில் 6, 7 குடும்பங்களில் இருந்தேனும் பிள்ளைகள் வெளி நாடுகளில் வேலைப் பார்கின்றனர். வேலைப் பளுவால் இந்தியா வர முடியாததால், 55, 60 வயதை தாண்டியப் பெற்றோர்கள், பிள்ளைகள் இருக்கும் இடம் பயணிப்பது அதிகமாகி விட்டது. முக்கியமாக குழந்தை பேரு காலம் அல்லது பேரக் குழந்தைகளின் விடுமுறை போதும் மிகவும் அவசியமாகிறது.  இரு பாலரும் வேலைக்குப் போவதால் பெரியவர்களின் வருகை சிற்சிலப் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது நல்ல விஷயமே; ஆனால் பெரியவர்களுக்கு ஏற்படும் சில சங்கடங்களையும் கஷ்டங்களையும் சிலர் கவனிக்கத்  தவறி விடுகின்றனர்.

முதலாவதாக பயண நேரம்; U.S,U.K போன்ற நாடுகளுக்கு குறைந்த பட்சம் 18,20 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே பயணிப்பது அந்த வயதில் மிகுந்த சிரமங்களையும் , அசௌரியத்தையும் ஏற்படுத்துகிறது. பேரு காலத்தில், எந்தத் தாய்க்குமே கூட இருந்து கவனிப்பது மகிழ்ச்சியும், மன நிறைவையும் தரும் விஷயம்; ஆனால் கூடுதல் சுமையாக வீட்டு நிர்வாகமும், சமையலும் சேரும் போது செய்ய மனம் இருந்தாலும், உடல் ஒத்துழைக்க மறுக்கிறது; வேலைக்கு  ஆள் கிடைப்பது கஷ்டம் என்றாலும், வாரத்தில் 1,2 முறையேனும் உதவிக்கு வைத்தால் சுமை அதிகம் தெரியாது.

இன்னொரு ஏக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் மொழி ; வெளிநாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் தாய் மொழி அல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதே பெரிதும் வழக்க மாகிவ்ட்டது. என்னதான் இக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்து இருந்தாலும், உச்சரிப்பு வேறுபடுவதால் புரிந்து கொள்வதில் சிரமும், ஒரு அந்நியத் தன்மையும் தான் ஏற்படுகிறது. பேரக் குழந்தைகளுடன் சிறிது  காலமே இருக்கக் கூடிய சந்தர்பத்தில், தாய் மொழியால் தான் அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள முடியும். உறவின் வலுவானப் பிணைப்பிற்கு தாய் மொழி தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். அலுவலகம், பள்ளி .பொது இடங்கள் செல்லும் போது அந்தந்த நாட்டு மொழி தெரிந்திருப்பது அவசியம். அதே முக்கியத்துவத்தை அவரவர் தாய்மொழிக்கு கொடுக்கும் வண்ணம் வீட்டிலாவது பேச வேண்டும்.

மற்றும் இப்போது விமான சேவையில் நிறைய கூடுதல் வசதிகளை பெற முடிகிறது. குழந்தைகளை, விடுமுறை போது பாதுகாப்பாக தனியாக அவரவர் செல்ல விரும்பும் இடங்களுக்கு அனுப்பவும் முடியும்; இம்மாதிரி பெரியவர்கள் வருவதற்கு பதில் குழந்தைகளை அவர்கள் இருக்கும் இடம் அனுப்புவதால் கூடுதல் பிணைப்பும், பழக்க வழக்கங்களை நன்கு அறிந்துக் கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்த கோணத்தில் சிந்தித்தால் எல்லோருக்கும் சுமையை விட சுகமே மேலோங்கி நிற்கும் அல்லவா !!!