புதன், 7 மார்ச், 2012

தாய்மைக்கு பூட்டா!!



இன்றைய உலகில் எவ்வளவுக்கு எவ்வளவு அறிவியலும் தொழில் நுட்பமும் பெருகி உள்ளதோ அதே அளவு சமுக விரோத செயலும் கொடுமைகளும் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன.அது வளர்ந்த  நாடானாலும் சரி, நம் போல் வளர்ந்துக் கொண்டிருக்கும் நாடும் விதிவிலக்கல்ல; இதற்கு காரணம் அந்தந்த சமுதாயத்தைத் தான் கூற முடியும். சமுதாயம்   என்பது தனிப் பட்ட அமைப்பு அல்ல; அங்கு வாழும் மக்களைத் தான் குறிக்கும். நல்லதிர்கான பலனை அனுபவிப்பது  போல் சமுக விரோத செயலை தடுப்பதற்கான பொறுப்பும் அங்குள்ள  மக்களின் கையில் தான் உள்ளது. உதாரணமாக இன்று நம் நாட்டை எடுத்துக் கொள்வோம்; சமுக விரோத செயல்களோடு, கொலை, கொள்ளை கற்பழிப்பு, திருட்டு போன்ற மனிதாபமற்ற செயல்கள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது .அதுவும் இதில் அதிகம் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளம் வயதினரே என்று அறியும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதற்கு பணத்தேவை அதிகரித்திருப்பது ஒரு காரணமாக கூறப் பட்டாலும், இன்னொருக் கோணத்தையும் பார்க்க வேண்டி உள்ளது; குறிப்பாக நம் இந்தியாவை பொறுத்த வரை .

முன்பும் நம் நாட்டை பொறுத்தவரை இத் தகைய செயல்கள் குறைந்த விழுக்காடே இருந்து வந்தது; அதுவும் வறுமையில் வாடுபவர்களாலும், பணத்தாசையில் இருந்தவர்களால் மட்டுமே அதிகம் நடத்தப் பட்டு வந்தது. ஆனால் இப்போது படித்தவர்களும் ,நல்ல நிலையில் இருப்பவர்களும் கூட இச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மூளையை நல்ல வழிப்  படுத்தாமல் குறுக்கு வழிலும் பிறரைக் காயப் படுத்தியும் குறுகியக் காலத்தில் முன்னுக்கு வரவே ஆர்வமாக இருக்கின்றனர். அது மாதிரி செய்வதில் ஒரு குற்ற உணர்வு கூட வருவதில்லை. இதன் காரணம் குழந்தை வளர்ப்பில் ஒரு பெண்ணின் அதாவது தாய்மையின் பங்கு குறைந்து வருவதனால் கூட இருக்கலாம்.ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் தாய் என்பவளின் பங்கு மிகவும் அவசியம் என்பது எனது தாழ்மையானக் கருத்து. சமுதாயம் என்பது வீட்டில் இருந்து தான் ஆரம்பமாகிறது.ஒரு மனிதனை ஒழுக்கமான நேர்மையான மதிப்புடையவனாக  அங்கீகரிக்க கூடிய தகுதியை தாயின் வளர்ப்பு முறை பெற்று தர முடியும். இன்று தாயன்பு முழுவதும் ஒரு சேரக் கிடைக்காமல் ரேஷன் முறையில் தான் கிடைக்கிறது. படிப்பு, வேலை என்று பொறுப்புக்களை பெருக்கிக் கொண்டதால் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது தான் வருதத்திற்குரியது. பெண்களின் படிப்பிற்கு முன்பு அதிக முக்கியத்துவம் இருந்ததில்லை; ஆனால் இப்போது அதிகம் படித்து பல முன்னேற்றங்களை காண்பது உண்மையிலே பெருமை பட வேண்டிய ஒன்று.

அதேசமயம், படித்தால் கண்டிப்பாக வேலைப் பார்க்க வேண்டும், இல்லை என்றால் எல்லாமே வீண் என்று நினைக்கும் பிடிவாத மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்;படிப்பு என்பது அறிவை விருத்தி செய்துக் கொள்ளவும்,சரியானக் கோணத்தில் அணுகவும் ,மனப் பக்குவத்தை பெறவும் துணை புரிகிறது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். குழந்தை வளர்ப்பில் நம் நாட்டை பொறுத்த வரை பெரும் பங்கு அம்மாவிற்கு தான்; நாம் ;தந்தையை விட தாய்க்கு தான் அதிக மதிப்பும் மரியாதையும் அளித்து வருகிறோம்; தந்தையால் சீர் கெட்டக் கெடுக்கப் பட்டக் குழந்தைகளை பற்றிக் கூட கேள்வி பட்டிருக்கோம்; பார்த்திருக்கிறோம்; ஆனால் தாயால் சீர்கெட்ட குழந்தைகளை பற்றிக் கேள்விக் கூட பட முடியாது;  பெண்களுக்கு தாய்மை என்பது இயற்கையே தந்த வரம்; எல்லாக் குழந்தைக்கும் முதல் ஆசான் தாய் தான். குழந்தைக் கருவில் இருக்கும் போதே ஆரம்பிக்கும் உன்னதமான உறவு இது என்றால் மிகையாகது.

தாய்மை அடைந்த பெண்ணின் எண்ணங்கள்,செயல்பாடு எல்லாம் அப்போதிலிருந்தே வயிற்றில் இருக்கும் சிசுவுடன் பரிமாற்றம் பெறத்  தொடங்குகிறது. நல்ல மனிதனின் தொடக்கமும் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. உள்ளமும் செயலும் சந்தோஷமாக இருப்பதின் பிரதிபலிப்பை குழந்தையிடம் காண முடியும். தாய்மைக் காலமும், பிறந்த பின் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை தாயின்அருகாமையும், அன்பும் அரவணைப்பும் குழந்தைக்கு கண்டிப்பாகத் தேவை. அது தான் நல்ல மனிதனாக உருவெடுக்க துணை புரியும் பலமான அஸ்திவாரம். ஆனால் இன்றைய பெண்கள் வேலைக்கு போகும் கட்டாயத்தால் எந்நேரமும் வேலைபளு, மன அழுத்தம்,பரபரப்பு,கஷ்ட்டங்கள் என்றே இருப்பதால் தாய்மையை சரியாக சந்தோஷமாக அனுபவிக்க கூட முடிவதில்லை; வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் பிறந்த பிறகும் அதற்கான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. குழந்தை பிறந்தவுடன் ஒரு ஆயாவை அமர்த்தி விட்டால் பொறுப்பு தீர்ந்தது என்று நினைக்கிறார்கள்; சம்பளத்திற்கு வேலை பார்பவர்களிடம் இருந்து உண்மையான அன்பும்,அரவணைப்பும் எப்படிக் கிடைக்கும்? குழந்தைகளுக்கு அந்தந்த வயதில்தாயின் மூலம்  கிடைக்க  வேண்டியது ,காலத்தின் கட்டாயம் என்ற பெயரில் மறுக்க படுவது நியாயமில்லை; தேவைகளும் வசதிகளும் நாமாகவே ஏற்படுத்திக் கொண்டது தான்; எப்போது எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்; ஏன் அந்தக் காலத்தில் 4,5 குழந்தைகள் இருந்தும் கூட நல்ல ஆரோக்கியமான ,வசதியையும் கொடுத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வளர்க்கவில்லையா ?அப்போது ஒரே வீடாக , மற்ற எரிபொருள், வாகன,மின்சார ,உணவு எல்லாம் ஒன்றாக பொதுவாக இருந்தது. ஆனால் இன்று குடும்பத்தில்  நான்கு பேர் இருந்தாலும் தனித் தனி வீடு,வாகனம் என்று எல்லாம் பிரிக்கப் பட்டுவிட்டது; அது தான் தேவை கூடுகிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த பட்சம் குழந்தைகள் வளர்பதில்லாவது  பெண்கள் தங்கள் பொறுப்பு எத்தகையது என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் குறிப்பிட்டக் காலம் வரை தாயின் அரவணைப்பு அவசியம். ஒரு தாயால் தான் அன்பு நேர்மை உறவுகளின் மேன்மை ஏன் எல்லாவற்றையும் சரியானப் பார்வையில் புரிய வைத்து வளர்க முடியும். சில ஆண்கள் விதி விலக்காக இருக்கலாம். அதையே உதாரணமாகக் கொள்ள முடியாது. நல்ல சமுதாயம் உருவாவது இளங்குருத்துக்களின் கைகளில் தான் இருக்கு; இளங்குருத்துக்களை நல்ல விதமாக உருவாக்குவது ஒரு தாயின் கையில் தான் இருக்கு என்பதை பெண்கள் உணர வேண்டும். அதற்காக  குறுகிய காலத்திற்கு சில தியாகங்களை செய்வதில் தவறில்லை. இப்போதைய இளைய சமுதாயத்தின் விரும்பத்தகாத சில நடவடிக்கைகளின் காரணம் சிறு வயதின் வளர்ப்பு முறையின் பிரதிபலிப்பாகக் கூட இருக்கலாம்; அதைக் கருத்தில் கொண்டு பெண்கள் குழந்தை வளர்ப்பதில் தங்களை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டு நல்ல சமுதாயத்தை உருவாக்க துணை புரிய வேண்டும்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஏன் இந்தக் கொலை வெறி?



சமீபத்தில் சென்னை பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவம் மனதை உலுக்கியது மட்டுமல்லாமல் நமது மாணவ சமுதாயம் சென்றுக் கொண்டிருக்கும் பாதை பற்றிய பயத்தையும் கவலையையும் கொள்ளச் செய்கிறது. ஒரு பிரபல பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் தன சக நண்பர்களின் முன்னே தன் ஆசிரியரைக் குத்திக் கொலை செய்தான் என்ற செய்தியை படித்தப் போது, இதயம் துடிக்க மறந்து அதிர்ச்சியானது உண்மை. இதற்கான காரணம் அந்த ஆசிரியர் குறிப்பிட அந்த மாணவன் படிப்பில் சற்று பின் தங்கி இருப்பதாக குறிப்பேட்டின் மூலம் பெற்றோருக்கு தெரிவித்ததால் தான். அவர் தன கடமையை தானே செய்தார். இம்மாதிரி, மாணவன் தன் நண்பர்களையும் ஆசிரியர்களையும் சுடுவது எல்லாம் வெளி நாடுகளில் நடப்பதை தான் அதிகம் கேள்விபட்டிருக்கோம்; ஆனால் இங்குமா? நம்பவே கஷ்டமாக இருக்கிறது. இது தொடராமல் முளையிலேயே கிள்ளப் பட வேண்டும். மற்றக் கலாச்சாரம் போல் இதுவும் நம்மில் பரவுவதை அனுமதிக்க முடியாது.

இதற்கு பொறுப்பு நீயா நானா என்று விவாதம் செய்யாமல் எல்லோரும் சேர்ந்து தீர்வுக் காண முயல வேண்டும். இன்றைய ஆசிரியர்களின் நிலைமை ஒரு விதத்தில் சவாலாகத் தான் உள்ளது. எல்லாப் பள்ளித் தலைமைகளும் நூறு சதவிகித ரிசல்ட் வர வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதால் மாணவர்கள், பெற்றோர் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் இதனால் பாதிக்கப் படுகின்றனர். குறுகியக் காலத்தில் நிறைய பாடங்களை முடிக்க வேண்டிய சூழல்; அதிலும் மாணவர்களை  எப்படி நடத்த வேண்டும், கண்டிப்பு, தண்டனை எந்த அளவிற்கு இருக்கலாம் என்று நிறையக் கட்டுப்பாடுகள்; ஆசிரியர்களுக்கென்று தனி மதிப்பு நம் நாட்டில் எப்போதுமே உண்டு; இன்றும் ஆசிரியர் தினத்தை சிறப்பாகக் கொண்டாட தவறுவதில்லை; முன்பெல்லாம் அவர்களிடம் ஒரு பயம் கலந்த மரியாதையை இருந்து வந்தது; அவர்கள் நம்மைக் கண்டித்தாலோ,அறிவுரை வழங்கினாலோ சரியானக் கோணத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது; நம்மிடத்தில் அசிரியர்களுக்குண்டான அக்கறை உணரப் பட்டது. இன்று நிலைமை அப்படி இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்; ஆசிரியர்களால் நல்லெண்ணத்தில் சொல்லும் விஷயங்களை பெற்றோர் கூட புரிந்து கொள்வதில்லை; நீங்கள் எப்படி என் பிள்ளைகளைப் பற்றி சொல்லலாம் என்று சண்டைக்கு வரும் முதல் நபர் சில இடங்களில் அவர்களாகத் தான் இருக்கிறார்கள். மாணவர்கள் முன்னிலையிலே அவர்களைத் தரக் குறைவாக பேசினால் மாணவர்களுக்கு எப்படி அவர்களிடம் மதிப்பு வரும்?


அப்படியே சில ஆசிரியர்கள் ஏதேனும் கடுஞ்சொல் கூறிக் கண்டித்தால் தொலைந்தது! உடனே ஒரு தற்கொலை முயற்சி; அப்போதும் இடி வாங்குவது பரிதாபத்திற்குரிய ஆசிரியர்களே. முழு சுதந்திரத்துடன் ஆசிரியர்களை செயல் பட விட்டால் தான் ஒரு நல்ல  மாணவனை உருவாக்க முடியும். அந்த நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருத்தல் வேண்டும்.

இதில் சம பங்கு பெற்றோருக்கும் உண்டு; காலத்தின் கட்டாயத்தால் தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பணத்திற்கு குறை இல்லை; தேவையா இல்லையா என்று அறிந்துக் கொள்ளாமலே குழந்தைகள்  எந்தப் பொருளைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுக்கின்றனர். குழந்தைகள் எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை ; ஆனால் அதனாலேயே எந்தப் பொருளின் அருமையும்,பெறுமையும் தெரியாததோடு, பிடிவாதமும் வளர்கிறது. உயர் தரக்  கல்விக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நல்லப் பள்ளியிலும் சேர்க்கின்றனர்; ஆனால் அதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைப்பது தான் தவறாகி விடுகிறது. வீட்டை விட பள்ளியில் தான் அதிக நேரம் இருப்பதால் வழி   நடத்துவது அவர்கள் கடமை என்று சிலப் பெற்றோர் மெத்தனமாக இருந்து விடுகின்றனர். வேலை அழுத்தம் ஒரு புறம் இருந்தாலும் குழந்தைகளுடன் quality time ஒதுக்க வேண்டும். அதுவும் இந்த மாதிரி ஒன்பது, பத்தாம் வகுப்பிற்கு செல்லும் காலக் கட்டம் மிகவும் இக்கட்டானப் பருவம்; படிப்பினாலும் வயதிற்கே உரிய இயற்கையான மாற்றத்தினாலும் ஏற்படும் தடுமாற்றங்களை பெற்றவர்கள் தான் கவனிக்க வேண்டும். அவர்கள் படிப்பிலும் ஏன் நண்பர்கள் வட்டத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தருணம் இது. அது  மட்டுமல்லாமல் சமுக   வலை தளங்கலங்களும் அவர்களின் கவனச் சிதறல்களுக்கு ஒரு முக்கிய காரணமாகிறது. தேவையான வசதிகளையும் பொருள்களையும்  கொடுப்பதோடு நிற்காமல் அப்போது தேவைப்படும் உண்மையான தோழமை  தான் சிறப்பாக வழி நடத்த உதவும். மேற்கூறிய  சம்மவம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. ஆசிரியர்களின் பாதுகாப்புக் குறித்தே கேள்விக் குறி ஆக்கி விட்டது. பெற்றவர்கள் கொடுக்கும் சலுகைகளால் குழந்தைகளின் சகிப்புத் தன்மை குறைவதோடு  போரிடும் குணமும் காணாமல் போய்  விடுகிறது. சில சமயம் குழந்தைகளிடம் வைக்கும் அதித அன்பு அவர்களைக் கோழைகள் ஆக்குவதோடு தன்னம்பிக்கை அற்றவர்களாக்கி விடுகிறது. இந்த மாணவன் ஒன்றும் பரம்பரை குற்றவாளியோ, திட்டம் தீட்டியோ நடத்த வில்லை; அந்தக் கணத்தில் ஏற்பட்டக் கோவம், தன்னை எப்படி  குறை சொல்லலாம் என்ற அகம்பாவவுமே தான்! எதையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனோதிடம் மாணவர்களிடையே இருப்பதில்லை. பள்ளியில் நடக்கும் சிறு சிறு சம்பவங்களுக்கு கூட தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது இதைத் தான் பறை சாற்றுகிறது. எல்லாப் பக்கங்களிலும் தாக்கப் படும் ஆசிரியர்களின் நிலையும் மிகவும் பரிதாபத்திர்க்குரியவர்களே.


இன் நிலை மாற எல்லோரும் புரிந்துக் கொண்டு செயல் பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆண் பெண் ஆலோசகர்கள் அவசியம் இருத்தல் வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் ஏதேனும்   மாற்றம் தென் பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே நடவடிக்கையில் இறங்க வேண்டும். இத் தகைய சம்பவங்கள் மேலும் தொடராமல் இருப்பது நம் கையில் தான் இருக்கிறது. 

சனி, 18 பிப்ரவரி, 2012

இது நாத்திகமாகுமா!!!!

இது நாத்திகமாகுமா!!!!


ஒவ்வொரு மதத்திற்கும் தனித் தனி கொள்கைகளும் வழிபாடுகளும் உண்டு. இருந்தாலும் இந்து மதத்திற்கு மட்டுமே உருவ வழிபாடு என்ற தனித்துமை உண்டு. இது ஒரு தனிச் சிறப்பாக இருந்தாலும் இதுவே சில சமயம் கேலிக்கு ஆளாக்க படுகிறது. இந்து மதம் என்றாலே பல உருவ கடவுள்களும், இரு பெரும் காப்பியங்களுமான ராமாயண மகாபாரதமும் தான் நினைவுக்கு வரும். இந்த மதத்தில் முக்கியமான ஒரு பண்பாடு ஒருவனுக்கு ஒருத்தி என்பது; ஆனால் வணங்கப் படும் சிவன் விஷ்ணு,முருகன்,கண்ணன் என்றுஎல்லாக்  கடவுளயும் இரு மனைவியுடன் தான் வணக்குகிறோம். இதுவும் மற்றவர்களால் கேலிக்குறியதாக்கப் படுகிறது. கண்ணனை பற்றி கூறும் போது, லீலைகள் என்ற பெயரில் வெண்ணை திருடியதையும் கோபிகைகளுடன் விளையாடி களித்த கேளிக்கைகளையும் தான் அதிகம் அறிவோம். ஏன் இப்படி? கதா காலஷேபத்திலும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி கதை, கிளைக் கதைகளையே கூறி வருகின்றனர்; இந்து மதத்திற்குரிய நான்கு வேதங்களில் வாழ்க்கைக்கு தேவையான எத்தனையோ கருத்துக்கள் கூற பட்டிருக்கின்றன.அதனைக் கொண்டு கதைகளும் கிளைக் கதைகளும் அமைக்கலாமே. படங்களிலும், திரைப்படங்களிலும் உருவங்களை வைத்து அவரவர் இஷ்டத்திற்கு, கையாளுவதும் வரம்பு  மீறுவதையும் ஒன்றும் செய்ய முடிவதில்லையே!

 இப்படி சொல்வதால் நாத்திகம் பேசுவதாக அர்த்தமாகி விடாது. போலிச் சாமியார்களும் கொள்கைகளை பரப்புவதை விட கடவுளை வைத்து மக்களை ஏமாற்றி சொத்துக் குவிப்பதில் தான் வெற்றிக் காண்கின்றனர். ஆன்மிகம் என்பதன் அர்த்தத்தை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை; கோவில் என்பது மனதிற்கு அமைதியையும் தூய்மை படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும் ; எல்லா மனிதனுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் ; ஆனால் கட்டுவதற்கு உதவியவர்களையே விதிமுறைகள் என்ற பேரில் கோவில் உள்ளே அனுமதிபதில்லையே?

அடுத்து ராமாயணம்; ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தி சொன்னாலும், அது எழுத பட்டக் காவியம்; அதில் வரும் ஒரு பாத்திரமான  ராமனைக் கடவுளாகக் கொண்டாடுகிறோம்; திருமணம் ஆனவர்களை ராமனும் சீதையும் போல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்; ஆனால் திருமணத்திற்கு பிறகு சீதை அனுபவித்த  துயரங்களும் துன்பமும் யாவரும் அறிந்ததே; அப்போ இந்த வாழ்த்து பொருந்துமா  என்று தெரியவில்லை;இதே காவியத்தில் தான் ராமனின் தந்தை தசரதனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள்; உடன் பிறப்பு பற்றிய பெருமைக்கு லட்சுமணன் எடுத்துக் காட்டாக இருந்தாலும், மனைவி ஊர்மிளா பாத்திரத்தின் பொறுமையும், பெருமை அதிகம் அறிய படாமலே போய்விட்டது; காவியத்திற்காக படைக்கப் பட்ட பாத்திரங்களை எல்லாம் கடவுளாக கொண்டாடுவதை விட, மனதை தூய்மை ஆக வைத்துக் கொள்ள உதவும் கருத்துக்களை பின் பற்றுவதே மேலாகும்; திருடர்களும், சமுதாய விரோத செயல்களில் ஈடுபவர்கள் கூட கடவுளை வணங்கி விட்டுத் தான் செய்கின்றனர். இதையும் கேலியாகத்தான் பார்கின்றனர்.

மகாபாரதத்தில் பகவத் கீதையில், வாழ்க்கைக்கு துணை நின்று முன்னேறக் கூடிய அனைத்து விஷயங்களும் சொல்லப் பட்டிருகிறது . ஆனால்,அதை விட அதில் இடம் பெற்றிருக்கும் போருக்கும் சண்டை சச்சரவிற்கும் தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பேசப்   படுகிறது. அதிலும் திரௌபதைக்கு 5 கணவர் என்பதை காவியம் என்பதாலையே ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இன்னொன்று , மகாபாரதத்தில்  சகோதரி தேவகிக்கு  பிறக்கும் எட்டாவது குழந்தையால் மாமனான கம்சனுக்கு ஆபத்து என்று ஒரு அசரிரி கேட்கும்; இந்தக் காலத்து சிறுவன் கேட்ட கேள்வி, தெரிந்தும் ஏன் இருவரையும் ஒரே சிறையில் கம்சன் அடைத்தான் என்று?  இந்து மதத்தில் எத்தனையோ தெளிவான நல்லக் கருத்துக்கள் இருக்கின்றன. அதை எல்லாம் பரப்புவதில் தான் தீவிரத்தைக் காட்ட வேண்டும்.தேவையல்லாத பேச்சையும் கிண்டலையும் களைய முனைய வேண்டும்.

பொதுமறையான வள்ளுவர் எழுதிய திருக்குறளின் ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கூறப்பட்டுள்ளது. இது மனிதனுக்கு எந்தக் காலக் கட்டத்திலும் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. இதை விட ஒரு பெரிய பொக்கிஷம் வேறு உண்டா? கடவுள் பக்தி என்பதே மனதை தூய்மையாக வைத்துக் கொள்வது தான்! அது கீதை மூலமாகவோ திருக்குறளின் மூலமாகவோ கிடைக்குமே ஆனால் அதை பின்பற்றி நடப்பதில் தவறேதும் இல்லை.


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

கலக்கல் கலாச்சாரம்

கலக்கல் கலாச்சாரம் 


இப்போதெல்லாம் தமிழர் பண்பாடு கலாசாரம் இவை எல்லாம் ரொம்பவும் நீர்த்துக் காணாமல் போய்க் கொண்டிருப்பதாக புலம்புவது வழக்கமாகி விட்டது. ஆனால் அது அப்படி இல்லை என்று தான் தோன்றுகிறது. காலத்திற்கு ஏற்ப சில பழக்க வழக்கங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம்; அதையும் பண்பாட்டுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. முன்பெல்லாம் பெற்றோர் என்ன சொன்னாலும் திருப்பிக் கேள்விக் கேக்காமல் ஒப்புக் கொள்ளும் மனோபாவம் இருந்தது. இப்போதுள்ள தலை முறைக்கு எதற்கும் காரணம் தெரிய வேண்டும். சிலவற்றுக்கான விளக்கங்கள் பெரியவர்களுக்கே தெரியாததால் இந்தக் குழப்பம்; இந்தத் தலை முறையும் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்; எல்லா விஷயங்களுக்கும் காரணம்  இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது. பண்டிகைக் கொண்டாட்டங்கள் எல்லாம் மகிழ்ச்சிக்கும் உறவுகளின் அருமைக்கும் பெருமைக்கும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்; கூர்ந்து நோக்கினால் நாம் கொண்டாடும் பண்டிகை போது அந்தந்தக் காலத்தில் கிடைக்கும் காய் கனியையோ பொருட்களையோ தான் அதிகம் பயன் படுத்தி இருப்போம்; உதாரணத்திற்கு பொங்கல் பண்டிகை; புதிய அரிசியையும், அந்தக் காலக் கட்டத்தில் விளைந்திருக்கும் கரும்பையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்கிறோம்; சில பண்டிகைகள் போது ஆரோகியமான உணவு முறையை பின்பற்றுகிறோம் ;நவராத்திரியை உதாரணமாக கூறலாம். பூவிற்கும் நெற்றி பொட்டிற்கும் மிகுந்த முக்கியதுவத்தை தமிழ் காலாச்சாரம் அளித்து வருகிறது. இதில் எல்லாம் பெரிய முரண்பாடுகள் வருவதில்லை; சில நம்பிக்கை   சார்ந்த விஷயங்கள் செயல்படுத்த கட்டாயப் படுத்தும் போது தான் தர்கங்களும் தேவையில்லாத மனக் கசப்பும் ஏற்படுகிறது.

இது ஒரு விதத்தில் காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். முன்பெல்லாம் திருமணத்திற்கு தாலியான மஞ்சள் கயத்திற்கு பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது; ஆனால் இப்போ தாலிக் கட்டுவதை விட, திருமணம் பதிவு செய்ய படும் சிறு காகிதத்திற்கு தான் அதிக மதிப்பு ; தாலியை விட பதிவு செய்யப் பட்டிருந்தால் தான் அத் திருமணம் ஏற்றுக் கொள்ள படுகிறது; இதை காலாச்சாரம் தவறி விட்டது என்று எப்படி கூற முடியும்? காலாச்சாரம் என்ற பெயரில் பிள்ளை,பெண்ணின் தாய் விதவையாக இருந்தால் அவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் திருமணத்தில் கூட முழுமையாக கலந்துக் கொள்ளும் உரிமை வழங்கப் படவில்லை; கலைஞர் சொன்னது போல் அந்த வார்த்தைக்கு கூட ஒரு பொட்டு இல்லை; அதனாலேயே அமங்கலி என்று எழுதி வார்த்தைலாவது பொட்டு  இருக்கட்டுமே என்று பயன் படுத்தி வந்தார். இன்று நிலைமை மாறி வரவேற்கத் தகுந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது; இதுவும் காலாச்சாரத்தை மீறின விஷயம் இல்லை.ஒரு காலத்தில் ப்ரோகிதர்கள், கடல் தாண்டி செல்வது பாரம்பரியத்தை மீறின செயலாக கருதப் பட்டது; ஆனால் இன்றும் அப்படியே செயல் பட்டால் நமது பண்பாடு உலகளவில் தெரியப் படாமலே போயிருக்க வாய்ப்புண்டு. அதே சமுகத்தை சேர்ந்த சிலரால் தமிழர்களின் திறமையும் எல்லோராலும் பேசப் படுகிறது. நாமாக ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்கள் காலத்தினால் மாறும் போது அது கலாச்சாரத்தை மீறினதாகாது;

ஆனால் இப்படியே எல்லா விஷயங்களையும் ஒதுக்கியும் மாற்றியும் , காலத்தின் பேரில் பழி போடுவதையும் ஒப்புக் கொள்ள முடியாது; விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டு வருகிறோம்.அது முழுவதுமாக காணாமல் போகும் முன் சுதாரித்துக் கொள்வது நல்லது. திருமணம் என்றாலும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் சரியானபடி அவர்களை உபசரித்து அனுப்புவதில் கூட நாம் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை; நம்மை மதித்து வந்தவர்களை தக்க மரியாதையுடன் கவனித்து, உபசரித்து அனுப்புவது தான் பண்பாடு; அழைபிதழ்களை வேண்டுமானால் நேரமின்மைக் காரணமாக e-mail இல் அனுப்புவதை ஏற்றுக் கொள்ளலாம்; சில விஷயங்களுக்கு அதற்குண்டான முக்கியத்துவத்தை கொடுத்தால் தான் நன்றாக இருக்கும்.என்னதான் நண்பர்கள் பெருகி இருந்தாலும் சுற்றத்தார்களுக்கும் நாம் உரிய பெருமையை அளிக்க வேண்டும். பெரியவர்களை மதிப்பதிலும்,விருந்தோம்பலிலும் நமது கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க கூடாது. இது நாம் உண்மையிலேயே பெருமை பட வேண்டிய விஷயம். சுகி சிவம் அவர்கள் சொன்னது போல் முன்பு தனியாக இருந்த bath.room இன்று attached ஆகவும், சேர்ந்து இருந்த உறவுகள் deattached ஆக மாறிவிட்டதும் வருத்த பட வேண்டிய ஒன்றாகும். எதற்குமே react பண்ணுகிற அளவிற்கு நாம் act பண்ணுவதில்லை; இன் நிலை மாறினால் நன்றாக இருக்கும். காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை அனுமதித்தாலும் வேர்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இளம் தலை முறையிடம் தான் இருக்கு.

சனி, 4 பிப்ரவரி, 2012

வாங்க பேசலாம் !!!




சமீபத்தில் இந்தியக் கல்வித் தரத்தை பற்றி வெளி வந்த செய்தியை  அப்படியே ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும்அதை ஒருமுன்னெச்சரிக்கையாக எடுத்துக்  கொள்வதில் தவறில்லை. சர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் அடிப்படை கல்வியை ஆராயும் போது நமது கல்வித் தரம் மிகவும் பின் தங்கி இருப்பதாக கணித்துள்ளனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள கல்வியின் தரம், 72 நாடுகளில் 70 வது இடத்தில் இருப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள 2  மாநிலங்களைக்  கணக்கில் கொண்டு இந்த முடிவை அறிவித்திருக்கின்றனர். ஆனால் இது எந்த அடிப்படையில், எந்த அளவு கோலில் கணக்கெடுக்கபட்டது ? என்று  தெரியவில்லை; இவ்வளவு பெரிய ஆய்வை வெறும் இரண்டு மாநிலத்தை வைத்து எப்படி முடிவிற்கு வர முடியும் . இன்று, இந்தியாவில் படித்த நிறைய பேருக்கு வெளி நாட்டில் வேலை வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகிறது. அது எப்படி சாத்தியம்? .ஒன்றை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்; முன்  போல் ஆசிரியர்கள்அதிக  ஈடு பாட்டுடன் சொல்லிக் கொடுப்பதில் வேண்டுமானால் தொய்வு நிலை ஏற்பட்டிருக்கலாம்; மேலும் இப்போது தரமான ஆசிரியர்களைக் கூட காண்பது அரிதாகி விட்டது. எல்லோருக்கும் பணத் தேவை அதிகரித்திருப்பது காலத்தின் கட்டாயம் .ஆசிரியர் வேலையில் இதை எதிர் பார்க்க முடியாது; ஒரு வேளை அவர்களையும் மதித்து நல்ல சம்பளம் கொடுத்தால் தரமான ஆசிரியரை பெறுவதில் கஷ்ட்டம் இருக்காது.

ஏட்டுக் கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பது பழமொழி; நம் நாட்டில் பள்ளி வாசனை அறியாத சிறுவர்கள் கூட கணக்கு வழக்குகளில் மிகவும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.இதை பெட்டிக் கடைகளிலும், பலசரக்கு கடைகளிலும் வேலை செய்பவர்களிடம் கண்கூடாக பார்கிறோம். சில சுட்சமங்களும் சாதுரியங்களும் படித்தவர்களை விட இவர்களிடம் அதிகம் பார்க்க முடியும். ஆனால் அடிப்படைக் கல்வி இருந்தால் இவர்களால் இன்னும் சாதிக்க முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது. இம் மாதிரி விஷயங்களை பொது படையான ஒரு அளவு கோல் வைத்து கணிக்க  முடியாது. எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியான சட்டத் திட்டங்கள் இருப்பதில்லையே; சில சட்டங்கள் நாட்டுக்கு நாடு வித்தியாச படுகிறது; உதாரணத்திற்கு நம் நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் என்பது சட்டத்திற்கு விரோதமானது. ஆனால் சில நாடுகளில் சிறுவர்கள் கூட பகுதி நேர வேலை பார்ப்பதை பெற்றோரும் சரி அரசாங்கமும் சரி அனுமதி அளிக்கிறது; நமது நாட்டில் திரைப்படங்களில்  நடிப்பது மட்டுமே விதி விலக்கு; சில இடங்களில் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே கற்கும் வழக்கமும் இருக்கிறது; அது நமது நாட்டிற்கு சரிவராது. பல்கலை கழகமும், பள்ளிக் கல்லூரிகளும் நாட்டிற்கு  நாடு வித்தியாசமான சூழ்நிலையில் தான் அமையப் பெற்றிருக்கு; வளரும் நாடுகளில் அத்தகைய வசதியுடன் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது; அதனாலேயே கல்வித் தரம் பாதிக்கும் என்பதையும் ஏற்க முடியாது.


நம்  நாட்டில் கல்வின்  நிலை எந்த தரத்தில் இருக்கு என்பதை இன்னொருவர் சொல்லி அறிந்துக் கொள்ள வேண்டிய சுழலில் நாம் இல்லை. அது நமக்கே தெரியும்; எந்த நிலையிலுருந்து நாம் இன்று  இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கோம் என்று எல்லோரும் அறிந்ததே; இன்று மற்றவர்களுக்கு  போட்டியாக நாம் இருப்பதே  பெருமை பட வேண்டிய விஷயம். இன்றையக் காலக் கட்டத்தில்  நம்மிடையே  பல விஷயங்களில் மாற்றம் நடந்துக் கொண்டிருக்கும் நேரம்; அதனால்  சில பின்னடைவுகளும் தொய்வுகளும் ஏற்படுவது போன்ற தோற்றத்தை தவிர்க்க முடியாது தான். இது நிரந்தரம் கிடையாது; இந்நிலை கூடிய சீக்கிரமே மாறி விடும்.
  
உண்மை இன்று நமது அடிப்படைக் கல்வியில் தரமும் மாற்றமும் தேவை தான். காலத்திற்கு எற்றார் போல் நடை முறை  வாழ்க்கைக்கு  பயன் படும் வண்ணம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு செயல்படுவது அவசியம்; கட்டிடத்திற்கும்  வசதிக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை சரியான ஆசிரியர்களை அமர்த்துவதிலும் காட்ட வேண்டும் ;சரியான பயிற்சி பெற்றவர்களை பணிக்கு அமர்த்துவது மட்டும் அல்லாமல் தகுந்த ஊதியத்தை தருவதிலும் பரந்த மனத்தைக் காட்ட வேண்டும். சிறந்த கல்வி ஆய்வார்களைக்  கொண்டு சரியானபடி பாடத் திட்டங்களை வகுத்து நம்மாலும் சாதிக்க முடியும் என்பதை எல்லோரும் உணரும் நாள் கூடிய சீக்கிரமே அமையும்.