வியாழன், 15 செப்டம்பர், 2011

தேவை ஒரு தொடக்கம்!

இன்றைய இளையத் தலைமுறையின் அணுகுமுறையும் பார்வைக் கோணமும் மனோபாவமும், எல்லாமே ஒரு ஆரோகியமான முன்னேற்றத்தை நோக்கிச் செல்வது மிகவும் வரவேற்கத் தக்கது. ஜாதிப் பிரச்சனை மதவேற்றுமை, அந்தஸ்து பேதம் இவை எல்லாம் குறைந்து, எல்லோரையும் சமமமாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருகிறது. இதற்கு காதல் திருமணமும் ஒரு காரணமாக இருக்கலாம். தங்களுக்கு சரி என்று படும் செயல்களை தைரியமாக செயல் படுத்தும் பக்குவமும் இருக்கிறது. சில விஷயங்களில் முன்றைய தலைமுறை இடம் காணப் பட்ட குறுகிய மனப்பான்மை இத் தலைமுறை இடம் குறைந்து வருகிறது.

இன்று மக்கள் தொகை ஒரு பக்கம் அதிகரித்து வருவது போல், படிப்பு, வேலை நிமித்தம் காரணமாக வெளி நாட்டில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருகிறது . அதேப் போல இந்தியாவில் ஆதரவு அற்றக் குழந்தை களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்களைப்  பல நிறுவனங்களும், அமைப்புகளும் தத்தெடுத்து, தேவைகளை பூர்த்தி செய்து சிறந்த சேவையும் செய்துக் கொண்டுத்தான் இருக்கிறது . மேலும் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளி நாட்டில்வாழும் இந்தியர்கள் அளிக்கும் நன்கொடை, கல்வி இதரத் தேவைகளுக்கு பயன்படுவதுடன்  இன்னும் திறம்பட அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. இன்னும் சொல்லப் போனால் பிறந்த நாள், திருமணநாள், விசேஷ தினம் எல்லாம் இத்தகைய இல்லங்களுடன் சேர்ந்து கொண்டாடும் வழக்கம் அதிகரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

ஆனால் இது மட்டும் போதுமா? அடுத்த கட்டத்திற்கான அடியை வைக்க முயற்சி செயலாமே! இப்போதைய தலைமுறையில் இரு பாலருமே உழைப்பதால் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது. இவர்களால் ஒரு குழந்தை அல்ல இருகுழந்தைகளை வளர்க்கும் வண்ணம் வாழ்க்கையில் வசதியும், பொருளாதாரமும் குறைவின்றி அமைந்துள்ளது. தவிர, தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளிடம்தான் அன்பும், பாசமும், கிடைக்கும் என்று இல்லாமல், தத்தெடுத்து  வளர்பதாலும் அதைப் பெற முடியும் என்பதில் இத் தலைமுறைக்கு மாற்றுக் கருத்து இருக்காது. இவர்கள், இல்லங்களில் வளரும் ஒரு குழந்தையை தத்தெடுக்க முன்வர வேண்டும். இத்தகையக் குழந்தைகளுக்கு மறுக்கப் பட்ட, குடும்ப சுழலில் வளரும் வாய்ப்பு கிடைப்பதுடன், தவறானவர்களின் கைகளில் சிக்கி சமூக விரோத செயல்களில் ஈடு படுத்தப் படுவதையும் குறைக்க முடியும்.

எதற்குமே ஒரு ஆரம்பம் வேண்டும்; இப்போது முதலே அதற்கானமுயற்சியல்  ஈடு பட்டு செயல் படுத்த முன் வர வேண்டும். இந்த வேண்டுகோள் பரிசீலிக்கப் பட்டால் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு ஒரு உன்னதமான எதிர் காலம் அமைய வாய்ப்பு உண்டு.