செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

கொலைக்கு ஒரு லைசன்சா ??!!

இன்று தமிழ் நாடு முழுவதும் மூவரின் தூக்குத் தண்டனையையை ரத்து  செய்யக் கோரி போராட்டங்கள் நடை பெறுகிறது. பல நாடுகளில் தூக்குத் தண்டனையை முற்றிலும் ஒழித்து விட்டார்கள். ஆனால்,இந்தியா, அமெரிக்க போன்ற சில நாடுகளில் இன்றும் நடைமுறையில் இருப்பது தான் வேதனையை அளிக்கிறது. அஹிம்சைக்கு பேர் பெற்ற நம் நாட்டில் இத்தண்டனை நடைமுறையில் இருப்பது கொஞ்சமும் பொருந்தாத ஒன்றாகும். இதுவும் ஒரு வகை கொலை தான்! என்ன உரிமம் பெற்று செய்வது! அவ்வளவுதான். 

தூக்குத் தண்டனையை ஆதரிக்கும் அரசாங்கம் ஏன், கருணைக் கொலையையோ தற்கொலையையோ ஆதரிக்காமல் சட்டத்திற்கு விரோதம் என்று வழக்கு போடுகிறது. ஒரே விஷயத்தில் இரு விதமாக நடப்பது முரண்பாடு இல்லையா! அவரவர் கோணத்தில் பார்த்தால், சொந்த வாழ்க்கையைப் பற்றி முடிவு எடுக்க அவர்களுக்குத் தான் அதிக உரிமை உண்டு. இதில் அரசாங்கம் எப்படி தலை இட முடியும்? 

பொருளாதரத்தில் பின்தங்கியும், பணமின்மையாலும்,  தீராத நோயினாலும் தினம் தினம் போராடிக் கொண்டிருப்பவர்கள் கருணைக் கொலையைப் பற்றி நினைப்பதில் என்ன தவறு?  அவர்களிடம் அறிவுரைகளோ. நடந்துக் கொள்ள வேண்டிய முறைகளையோ சொல்வதால், பெரிய நன்மை ஒன்றும் ஏற்படப் போவதில்லை; அவர்களின் போராட்டமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும். இருந்தும் கருணைக் கொலையை அனுமதிக்கிரோமா? இல்லையே!!

வாழ்க்கையை வெறுத்து தற்கொலை வரை போக நினைப்பது கோழைத்தனம் என்று சொல்வது, கேட்க  வேண்டுமானால் சரி என்றுத் தோணலாம். ஆனால் அந்த முடிவு எடுக்க உண்மையிலே மிகவும் தைரியம் தான் வேண்டும்; அந்த நிலைக்கு ஒருவர் தள்ளப் பட்டால் அவரது வாழ்க்கை எப்பேர் பட்ட மோசமான சுழலில் இருந்திருக்கும் என்பதை நினைக்க வேண்டும். இவர்களுக்கும் சரியான ஆலோசனையும் மனத் தைரியமும் அளிக்க நிறைய அமைப்புகளும், நிறுவனங்களும் உள்ளன. இம்மாதரி சுழலில் இருந்து வெளி வரவும் உதவி புரிகின்றன. தற்கொலையை எவரும் ஊக்குவைப்பதில்லை.

அது போல் எப்பேர்பட்ட குற்றத்திற்கும் ஒரு தீர்வு உண்டு. எந்த மாதிரி தவறு புரிந்திருந்தாலும். ஒரு உயிரை எடுக்க எவருக்குமே உரிமை இல்லை. உயிரை
எடுக்க கூடிய குற்றத்தின் அளவு கோல் இது தான் என்று எவ்வாறு நிர்ணயம் செய்ய முடியும்?  தூக்குத் தண்டனையை தவிர்த்து ,வேறு முறையில் தீர்வு காண முயல வேண்டும். இத் தண்டனையால் குற்றங்கள் குறைய வாயப்பு உண்டு என்று சிலர் கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது. தண்டனைகள்  திருந்தவும், தவறை உணரும் வண்ணம் தான் இருக்க வேண்டுமே  அன்றி வாழ்க்கையை அழிக்கும் படி இருத்தல் கூடாது.