சனி, 8 அக்டோபர், 2011

பணக்கார (ஆ)சாமிகள் !!!

பொதுவாக மனிதர்களிடம் காணப்படும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இன்று கடவுளிடையும் பார்க்கப்   படுவது வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது .எந்தக் கடவுளும் தான் பணக்காரன் என்றோ ஏழை என்றோ பறைசாற்றிக் கொள்வதில்லை; மனிதர்களாகிய நாம் ஏற்படுத்தும் மாயை அன்றி, இது வேறொன்றும் இல்லை. இன்று சில கோவில்களில் காணப் படும் சொத்து விவரங்களைப் பார்த்தால், இந்தியா ஒரு ஏழை நாடு என்பதை எவருமே ஒப்புக் கொள்ளத் தயங்குவார்கள்.

இம்மாதிரிக் கோவில்களை அரசாங்கம் தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர யோசித்து வருவது நாம் அறிந்ததே! அது  மாதிரி நடக்குமே ஆனால் கடலில் கரைத்த உப்பு போல் யாருக்குமே  பயன் இல்லாமல், காணாமல் போக வாய்பு உண்டு. அரசாங்கத்திற்கே உள்ள சில விதி முறைகளால், நல்ல விஷயங்களை செயல் படுத்துவதில் தடங்கல்களும் காலத் தாமதமும் ஏற்படலாம். அதனால், கோவில் நிர்வாகிகளோ, உரிமையாளர்களோ சம்பந்த பட்டவர்களோ நிதானமாக யோசித்து சொத்துக்களை நல்ல முறையில் பயன் படும் வண்ணம் செயல் படுத்த முன் வர வேண்டும்.

அந்தந்த கோவில் சொத்துக்கள் அக் கோவில்களின் மேன்பாட்டுக்கே பயன் படவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து கொஞ்சம் வெளி வர வேண்டும். மனிதனிடம் காணப் படும் "எனது, உனது என்ற உணர்வெல்லாம் கடவுளிடம் கிடையாது; இன்று சிலக் கோவில்களில் பக்தர்களுக்கு, 5 star hotel அளவிற்கு பல  வசதிகளை வழங்குகிறது, அது தேவையா? மன அமைதிக்கும், நிம்மதிக்கும் இத் தளங்களை நாடி வருபவர்களுக்கு அது ஒரு பெரும்  பொருட்டாக இருக்க முடியாது. அதை விடுத்து, எத்தனையோ பழங்கால கோவிகள் பணப் பற்றாகுறையால் நலிந்து, அடிப்படை தேவைக் கூட இல்லாமல் களை இழந்துக் காணப் படுகிறது. அவைகளை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடு படலாம்.  

மேலும் அந்தந்த ஊரிலேயோ, அருகில் இருக்கும் கிரம்மங்களையோ தத்தெடுக்க முன் வர வேண்டும். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதி, குடிநீர் வசதி,மின்சார வசதி, கல்விக் கூடங்கள், அன்ன தானம், போன்ற தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக செயல் பட்டால், அதை விட பெரிய சேவை வேறொன்றும் இருக்க முடியாது. தேவைக்கு அதிகமான பணம் இம்மாதிரி நல்ல முறையில் பயன் படுத்துவது, மற்றர்வர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. சம்மந்தப் பட்டவர்கள் இது பற்றி சிந்தித்து ஒரு நல்ல முடிவிற்கு வந்தால் இரு கரம் நீட்டி வரவேற்கப் படுவார்கள் என்பது திண்ணம்.