புதன், 28 செப்டம்பர், 2011

பொறுப்பின்மையின் விலை !!!

அந்த பிரபலமான விளையாட்டு வீரரின் மகன் இறந்த செய்தியைக் கேட்டவுடன் மனம் மிகவும் வேதனையும், வருத்தமும் அடைந்தது. ஆனால், அதே சமயம் அதற்கான காரணம் அறிந்த போது பெற்றோர்களின் பொறுப்பற்றத் தன்மையை நினைத்து கோபம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

மேல்தட்டு மக்களிடம், முக்கியமான தினமோ, அல்லது  பிறந்த தினதிற்கோ விலை உயர்ந்த  பரிசு வழங்குவது என்பது  மிகவும் சர்வ சாதரணமாக நடக்கும் விஷயம் என்பதை மறுபதற்கில்லை. பொதுவாக பரிசுகள் அவரவர்களது status syimball ஐ பறைசாற்றும்  வண்ணமே இருக்கும். அது அவர்களுக்கு ஏற்றதா, தகுதி உள்ளதா, இல்லைத் தேவையா என்பது பற்றி யோசிப்பதில்லை. மேற் கூறப் பட்ட சம்பவமும் அதற்கான ஒரு உதாரணமே! தம்மிடம்  இருக்கும் செல்வம், குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற தான் என்ற பாச எண்ணம் அவர்களின் கண்ணை மறைத்து விடுகிறது. 

ஓட்டுவதற்கான அடிப்படை உரிமம் கூட இல்லாதவர்க்கு, இத்தகைய வண்டியை பரிசாக அளிக்கும் முன், யோசிக்காதது யார் தவறு?
கொடுத்த பிறகேனும், அதற்கான பாதுகாப்பையும் தேவையையும் கவனிக்காமல் இருந்தது பெற்றோர்களின் பொறுப்பற்றத் தன்மையையே காட்டுகிறது. குழந்தைகள் செய்யும் வயதிற்கு மீறிய, சில விஷயங்களை வேண்டுமானால் நாம் பெருமையாகப் பேசலாம். ஆனால் இத்தகைய சில செயல்களை ஆதரிப்பதால், இம்மாதிரி பெரிய இழப்புகளையும் சந்திக்க வேண்டி உள்ளது.

இனி   பெற்றோர்கள் சில விஷயங்களில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.குழந்தைகளின் ஆசையையும்,தேவையையும் பூர்த்தி செய்வதில் கண்மூடித்தனம் வேண்டாம். பணத்தின் அருமை, பொருள்களின் தேவை எல்லாம் அவர்களும் உணரும் வண்ணம் பெற்றோர்களின் அணுகுமுறை இருத்தல் நலம். எதையும் சுலபமாக பெற முடியும் என்ற எண்ணத்தை வளர விட்டால் எதிர் காலத்தில் உழைப்பு , கடின முயற்சி போன்றவற்றின் அவசியத்தை உணராமலே  போக வாய்ப்பு உண்டு. இனியேனும் கொஞ்சம் விழிப்போடு இருப்போமாக!!!


புதன், 21 செப்டம்பர், 2011

இன்டெர்(நொந்து) பிசினஸ் !!!



வேலையிலுருந்து ஓய்வு பெற்றாகிவிட்டது. வீட்டில் சும்மா எப்படி பொழுதைக்  கழிக்க முடியும் ? இருக்கவே  இருக்கு கணினி!! நண்பன் இன்டர்நெட்டில் நிறைய சம்பாதிக்கலாம் என்று உசுப்பேத்த காணாததை கண்ட மாதிரி அந்த வலையில் டமார்!! ஒன்றுமில்லை விழுந்த சத்தம்!!. 

அவ்வளவுதான் அன்றையலிருந்து நானும் laptop ம் புது கணவன் மனைவி போல் பிரிக்க முடியாமல் ஆகினோம். லேப்டாப்ய் மடி மீது வைத்துகொண்டு என்னவோ office வேலை மும்மரமாக  செய்கிற மாதரி முகத்தை வைத்து கொள்வேன். என் மனைவிக்கு கணினி பற்றி ஒன்று தெரியாதது எனக்கு வசதி ஆகிவிட்டது.சே! நம்ப ஆளுக்குதான் எவ்வளவு பொறுப்பு என்று பெருமைப்பட,. வேளா வேளைக்கு கல்யாண பரிசு தங்கவேலு style இல்  காபி டிபன் எல்லாம் சரியான நேரத்திற்கு வரும.  நூற்றுக்கு 80 விழுக்காடு  home பிசினஸ் எல்லாமே பணம் முழுங்கும் கவர்ச்சி கன்னிகள் தான் என்பது புரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த புதைக்குழியில் இழுக்கப் பட்டேன்.அவர்களுடைய business ஐ பற்றி விலாவாரியாக ரொம்பவும் பிரமாதமாக விளக்கி இருப்பார்கள். சில பொய்யான நபர்களின் போட்டோகளும், அவர்களின் வாக்குமூலம் இதில் இடம் பெற்றிருக்கும். அதை படித்து உடனே அதில் இறங்கினால் அப்புறம், "அடடா வடை போச்சே!" கதை தான். 

ம். இப்படிதான் நானும் ரொம்ப ஆசை பெருகி ஒரு சைட் இல் போயி free registration தானே என்று நினத்து எல்லா விவரங்களையும் தந்த பிறகு ,  ரொம்ப குஷியாக இருந்தேன். ஆனால்  வந்ததே ஒரு bouncer .. என்னவென்றால், மேலும் பணம் செலுத்தி upgrade செய்தால் தான் அடுத்தக் கட்டத்திற்கு போகமுடியும் என்ற நிலை. சரி, இந்தஒரு  முறை மட்டும் செலுத்தலாம் என் நினத்து ரகசியமாக (பொண்டாடிக்கு  தெரியாமல்) credit card விவரங்களை செலுத்தினேன். அவ்வளவுதான் , என்ன ஆச்சர்யம் ! ஒரு சூப்பரான website உடனே வந்தது. ரொம்ப பெருமையாக என் மனைவியிடம் காண்பித்தேன். ஏன் என்றால் ஒரே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியும் என்பதை விளக்கி (விளங்காத) ஒரு அட்டவணை!! ஆனால் , அவள் பார்த்த பார்வை இதெல்லாம் புரிந்தால் நாம எங்கேயோ போயிருப்போமே என்கிற மாதிரி மனதை உறுத்தியது. இருந்தாலும் ஆண் வர்கமாயிற்றே !! அவளை  அடக்கினேன். ஆனது ஆகட்டும் என்று வேலையை ஆரம்பித்தேன். அடுத்த கட்டமாக ,இன்னும் 10 ஆட்களை இதில் சேர்க்கச் சொல்லி ஒரு நிபந்தனை! ஒருத்தர் இரண்டு ஏமாளி வேண்டுமானால் கிடைப்பார்கள் இவ்வளவிற்கு எங்கேப் போக?  இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என நினைத்தேன். சரி நமக்கு இந்த பிசினஸ் லாயக்கு இல்லை,என்று  வேறு siteக்கு போனால்  மீண்டும் இதே கதை தான். தப்பி தவறிக் கூட பணம் கையில் கிடைத்து விடக் கூடாது என்பதிலே எல்லா site ம் குறியாக இருப்பது புரிந்தது. இது புரியாமல் மனைவியோ யார் என்னை பற்றி கேட்டாலும் பெருமையாக இன்டர்நெட் பிசினஸ்இல் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்று சொல்வாள். எனக்குதான் தெரியும் நான் என்ன கிழிக்கிறேன் என்று!! ரொம்ப வெறுப்கிவிட்டது.. 

 சும்மா விவரம் கெட்ட தனமா இன்டர்நெட்டில் பிசினஸ் செய்கிறேன் என்று ஜம்பம் செய்யாமல் உருப்படியான மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்  என்ற புத்தி வந்தது.

 "எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வரவேண்டும் ...' என்ற L. R. ஈஸ்வரி அவர்களின் பாடலை சற்று மாற்றி '' எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கு வரவேண்டாம் ."  என உங்களை எச்சரிக்கிறேன்  !!

வியாழன், 15 செப்டம்பர், 2011

தேவை ஒரு தொடக்கம்!

இன்றைய இளையத் தலைமுறையின் அணுகுமுறையும் பார்வைக் கோணமும் மனோபாவமும், எல்லாமே ஒரு ஆரோகியமான முன்னேற்றத்தை நோக்கிச் செல்வது மிகவும் வரவேற்கத் தக்கது. ஜாதிப் பிரச்சனை மதவேற்றுமை, அந்தஸ்து பேதம் இவை எல்லாம் குறைந்து, எல்லோரையும் சமமமாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருகிறது. இதற்கு காதல் திருமணமும் ஒரு காரணமாக இருக்கலாம். தங்களுக்கு சரி என்று படும் செயல்களை தைரியமாக செயல் படுத்தும் பக்குவமும் இருக்கிறது. சில விஷயங்களில் முன்றைய தலைமுறை இடம் காணப் பட்ட குறுகிய மனப்பான்மை இத் தலைமுறை இடம் குறைந்து வருகிறது.

இன்று மக்கள் தொகை ஒரு பக்கம் அதிகரித்து வருவது போல், படிப்பு, வேலை நிமித்தம் காரணமாக வெளி நாட்டில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருகிறது . அதேப் போல இந்தியாவில் ஆதரவு அற்றக் குழந்தை களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்களைப்  பல நிறுவனங்களும், அமைப்புகளும் தத்தெடுத்து, தேவைகளை பூர்த்தி செய்து சிறந்த சேவையும் செய்துக் கொண்டுத்தான் இருக்கிறது . மேலும் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளி நாட்டில்வாழும் இந்தியர்கள் அளிக்கும் நன்கொடை, கல்வி இதரத் தேவைகளுக்கு பயன்படுவதுடன்  இன்னும் திறம்பட அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. இன்னும் சொல்லப் போனால் பிறந்த நாள், திருமணநாள், விசேஷ தினம் எல்லாம் இத்தகைய இல்லங்களுடன் சேர்ந்து கொண்டாடும் வழக்கம் அதிகரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

ஆனால் இது மட்டும் போதுமா? அடுத்த கட்டத்திற்கான அடியை வைக்க முயற்சி செயலாமே! இப்போதைய தலைமுறையில் இரு பாலருமே உழைப்பதால் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது. இவர்களால் ஒரு குழந்தை அல்ல இருகுழந்தைகளை வளர்க்கும் வண்ணம் வாழ்க்கையில் வசதியும், பொருளாதாரமும் குறைவின்றி அமைந்துள்ளது. தவிர, தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளிடம்தான் அன்பும், பாசமும், கிடைக்கும் என்று இல்லாமல், தத்தெடுத்து  வளர்பதாலும் அதைப் பெற முடியும் என்பதில் இத் தலைமுறைக்கு மாற்றுக் கருத்து இருக்காது. இவர்கள், இல்லங்களில் வளரும் ஒரு குழந்தையை தத்தெடுக்க முன்வர வேண்டும். இத்தகையக் குழந்தைகளுக்கு மறுக்கப் பட்ட, குடும்ப சுழலில் வளரும் வாய்ப்பு கிடைப்பதுடன், தவறானவர்களின் கைகளில் சிக்கி சமூக விரோத செயல்களில் ஈடு படுத்தப் படுவதையும் குறைக்க முடியும்.

எதற்குமே ஒரு ஆரம்பம் வேண்டும்; இப்போது முதலே அதற்கானமுயற்சியல்  ஈடு பட்டு செயல் படுத்த முன் வர வேண்டும். இந்த வேண்டுகோள் பரிசீலிக்கப் பட்டால் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு ஒரு உன்னதமான எதிர் காலம் அமைய வாய்ப்பு உண்டு.


ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

அனுபவம் புதுமை !!

நித்யாவின் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் அவளின் பெற்றோருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரே பெண்; மத்தியதர குடும்பம்; நீங்கள் நினைத்த மாதரியே வெளி நாட்டு மாப்பிளை தான். கிடைத்த 20 நாள் லீவில் வந்து திருமணத்தை முடித்துக் கொண்டு, இரண்டு நாளில் கிளம்பி விட்டான்.நித்தியா கொஞ்ச நாள் புகுந்த வீட்டில் இருந்து விட்டு தனியாக அடுத்த மாதம் கிளம்ப வேண்டும்; அப்பறம் எப்போ வர முடியுமோ? அதான் இந்த ஏற்பாடு.

நித்யா வளர்ந்து படித்து எல்லாம் தஞ்சாவூரில் தான். நகரில் வசிக்கும் பெண்களிடம் காணும் fashion, style எல்லாம் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் ரொம்பவும் தைரியமான பெண். நித்யாவின் கணவன் சந்துருவெளி நாட்டில் இருந்தாலும், தன் மனைவி ரொம்ப படித்து வேலைக்கு போக வேண்டும் என்று விருப்பப் படவில்லை. city இல் வளர்ந்த பெண்கள் அதற்கு  ஒத்து வருவது கொஞ்சம் கஷ்டம் என்று தெரிந்து city கு வெளியில் படித்த பெண் தான்  தனக்கு ஒத்து போக முடியும் என்று முடிவு செய்தான். அவனைப் பொறுத்த வரை சில விஷயங்கள் ஆண்களும், சிலது பெண்களுக்குமே உரித்தது; அதை அவரவர்கள்  செய்தால் தான் அழகு, அர்த்தமும் உண்டு என்று நினைப்பவன். ஏன் சில ஆண்கள் பரத நாட்டியம் நன்றாக ஆடினாலும், அதை விரும்ப மாட்டான் ; அந்த நடனதிற்கே உண்டான நளினமும், அழகும் பெண்களுக்குத் தான் பொருந்தும் என்பான்.

அன்று வீடே அமக்களப் பட்டது. நித்தியா ஊருக்கு கிளம்பும் நாள். முதல் முதலாக விமானப் பயணம்;  அவரவர்களுக்கு தோன்றிய அறிவுரைகளை, காசாப் பணமா, வாரி வழங்கிக் கொண்டிருந்தனர். சந்துரு வேறு exam எழுதுவது போல் 2 பக்கத்திற்கு எல்லா formalities ம் விளக்கமாக எழுதிக் கொடுத்திருந்தான். அம்மாவும் புரியாமல் கவலையோடு  அடிக்கடி ,மாப்பிள்ளைக் கொடுத்ததை ஒழுங்கா படித்துக் கொள் என்று புலம்ப எல்லோரின் அக்கறையும் பாசமும் புரிந்து மௌனமாகக் கேட்டுக் கொண்டாள். அவளை விமான நிலையம் வரை வழி அனுப்ப இரண்டு குடும்பமும் கிளம்பியது.

நித்தியா என்னத்தான் தைரியமாக இருந்தாலும், முதல் பயணம் நினைத்து உள்ளுக்குள் உதறத் தான் செய்தது. உள்ளேச் செல்ல விடாமல் ஒருவர் மாற்றி ஒருவர் அவளிடம் பிரியாணிவடை(பிரியா விடை) பெற்றுக் கொண்டிருந்தனர் .பெற்றோரைப் பார்க்கப் பார்க்க நித்யாவிற்கு பிரிவின் ஆழம் நெஞ்சை அடைத்தது. நேரம் போவதை உணர்ந்து எல்லா சாமான்களையும் சரிப் பார்த்து checkin counter ஐ நோக்கி செல்லத் தொடங்கினாள். இனிமேல் உதவிக்கு யாரையும் எதிர் பார்க்க முடியாது. எல்லா luggage ஐ trolly மேல் வைத்து வரிசையில் போய் நின்றாள். வரிசையில் நகர்ந்த  படியே தோளில் bag ஐ சரி செய்து passport மற்ற இத்யாதிகளையும் தயாராக வைத்துக் கொண்டாள்.

சுற்றிப் பார்க்கும் போது தான் தெரிந்தது, எத்தனை விதமான மக்கள்; ஒவ்வொருவர் முகங்களிலும் விதவிதமான உணர்சிகள். ஒரு புறம் எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் நித்யாவிற்கு தோன்றியது. ஒரு வேளை தன் முகத்தில் முதல் பயணம் என்று எழுதி இருக்கோ என்றுக் கூட நினைத்தாள்.ஐயோ! இந்த formalities எல்லாம் எப்படா முடியும் என்று இருந்தது முன்னால் இருப்பவர்கள் செய்வதை கவனித்துக் கொண்டு அதுபடியே தானும் செய்தாள். நடுவில் ஒருவர் தன்னுடைய சிறிய bag ஐ சேர்த்து cheak in பண்ண சொன்னதை நாசுக்காக ஒதுக்கினாள். ஒரு வழியாக எல்லாம் முடிந்து borading pass ஐ வாங்கிக் கொண்டு அடுத்த immigration கு நகர்ந்தாள். திடீரென்று நியாபகம் வந்து hand baggage கு உண்டான tag ஐ மீண்டும் counter இல் வந்து பெற்றுக் கொண்டாள். 

immigration முடிந்து அப்பாடி என்று ஒரு chair இல் அமர்ந்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் flight உள்ளே அனுப்புவார்கள்.அதற்குள் restroom போக நினைத்தாள். இப்பவும் பாட்டி சிறு வயதில் சொன்னது நியாபகம் வந்தால் சிரிப்பை அடக்க முடியாது; "ஏய், plane போகும் போது வாயை திறந்துக் கொண்டு பார்க்காதே; யாராவது பாத்ரூம் போன உன் வாயில் தான் விழும்"என்பாள். மனதிற்குள் சிரித்துக் கொண்டே, luggage உடன் restroom பொய் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு boardingpass உடன் உள்ளேச் செல்லத் தயாரானாள்.

ஜன்னல் பக்கத்து இருக்கையில் அமர்ந்து hand baggage தலைக்கு மேல் உள்ள box இல் வைத்து விட்டு அமர்ந்தாள். பதட்டத்தில் இத்தனை நேரம் காணமல் போன பசி இதோ இருக்கேன் என்று சத்தம் போட ஆரம்பித்தது. பாதுகாப்பு விதி முறைகளைக் கேட்கக் கூட மனம் மறுத்தது. எப்போடா உணவு தருவார்கள் என்று ஏங்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அலங்காரமாக உணவுத் தட்டு நித்யா முன் வைக்கப் பட்டது.  பழக்கம் இல்லாத உப்புச்சப்பில்லாத உணவால் பசி பன்மடங்கு ஆனது தான் மிச்சம்; சமாளித்து ஒரு மாதிரி தூங்கத் தொடங்கினாள். 

தீடிரென்று யாரோ உலுக்கியது போல் பதற்றத்தில் விழித்தாள்.வானிலைக் கோளாறினால் விமானம் தாறுமாறாகப் பறப்பதை அறிவித்துக் கொண்டிருன்தனர். பிடிமானமே இல்லாமல் அந்தரத்தில் சுழல்வது போல் ஒரு
மரண பயம் நித்யாவிற்கு ஏற்பட்டது. ஐயோ முதல் பயணமே கடைசி ஆகி விடுமோ என்று அஞ்சினாள். எல்லா வித அனுபவமும் ஏன் முதல் பயணத்திலே ஏற்பட வேண்டும் என்று நினைத்து நொந்தாள்.கண்ணை மூடி ப்ராத்தனை செய்யத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் விமானம் சாதரணமாகப் 
பறக்கத் தொடங்கியது. எப்போத் தூங்கிநாளோ விமானம் தரை இறங்குவதை உணர்ந்தாள். மீண்டும் வெளி வந்து immigration, customs எல்லாம் முடித்துக் களைத்து வெளியே வந்தாள். ஆவலாய் புன்னகையுடன் காத்திருக்கும் கணவனைக் கண்டவுடன், பதட்டம் எல்லாம் ஆதவன் கண்டப் பனிப் போல் காணாமல் போனது; சந்தோஷமாக கணவனின் கைக்குள் அடைக்கலம் ஆனாள்.



வெள்ளி, 9 செப்டம்பர், 2011

தீவிரவாதமா? கோழைத்தனம் !!!

இன்று தொலைக் காட்சியில் வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகு ஒவ்வொருவரும் தங்கள் உறவையும், உடன் பிறப்பையும் தேடி அலைந்தக் காட்சி மனதை உலுக்குவதாக இருந்தது. இம்மாதரி செயல்கள்  நாளுக்கு நாள் பெருகி வருவது வேதனையைத் தருகிறது. முதலில் இதை வெடிகுண்டு கலாசாரம் என்று கூறுவதே வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கலாசாரம் நல்ல விஷயங்களுக்குத் தான் துணை போகும், வழிக் காட்டுமே அன்றி இத் தகைய செயல்களுக்கு அல்ல;

நம் நாட்டு 70 விழுக்காடு  மக்கள் ஏற்கனவே பலவிதமான சவால்களுடன் வாழ்ந்துக் கொண்டிருகிறார்கள். அரசியல் வாதிகளின் ஆளுமை, ஊழல், அத்யாவசப் பொருட்களின் தேக்கம் எல்லாவற்றையும் ஏற்று  மிகுந்த சகிப்புத் 
தன்மையுடன் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய வாழ்க்கை வாழ்வதே குடும்பத்திற்கும், உறவுகளுக்கும் தான்; அதற்குமே இத்தகைய செயல்களினால் பங்கமும் இழப்பும் ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்?

ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் கூட எப்பேர்பட்ட பசியோ, கோபமோ இருந்தால் கூட , புலி புலியையோ,சிங்கம் சிங்கத்தையோ, நாய் நாயையோ அடித்து துன்புறுத்தி, கொன்று பசி ஆறுவதில்லை. அப்படி இருக்க  ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் ஏன் தன் இனத்தையே  அழிக்கும் செயலில் ஈடு படுகின்றான்; புரியவில்லை! ஒரு வேளை இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களுக்கு பலமான குடும்ப பின்னணி இல்லையோ; அதனால் தான் உயிரின் மதிப்பும் உறவுகளின் அருமையும் புரியவில்லையோ? உங்களின் கோரிக்கையை ஏற்க வைக்க அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுவது கோழைத்தனம். இதனால் உங்களுக்கு தீர்வும் கிடைக்கப் போவதில்லை; மக்களின் ஆதரவும் பெறப் போவதில்லை.

உங்களின் கோரிக்கைகளை யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம்  தீவிரமாக வாதம் செய்யுங்கள்; தீவிரவாத  செயலில் ஈடுபடுவதால் அது பிரச்சனையை இன்னும் பெரிதாகி வெறுப்பும் இழப்புகளும் தான் மிஞ்சும். அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும்; ஏன் உங்களில் ஒருவரே நாளை தூக்கு மேடை ஏறும் நிலை வந்தால் அதை எதிர்த்து போராடுவதில் முதலில் முன் நிற்பது இந்த அப்பாவி மக்களே தான். நம் மக்களுக்கு எதையும் மறக்கவும், மன்னிக்கவும் தெரியும். ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு. மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும் அப்பவும் அது அஹிம்சா வழி ஆகத் தான் இருக்கும்.

இயற்கையின் சீற்றத்தை கட்டுப் படுத்துவது நம் கையில் இல்லை. ஆனால் மனிதனின் சீற்றத்தால், மனிதனுக்கு ஏற்படும் கொடுமையையும், அழிவையும் கட்டுப் படுத்துவது நம் கையில் தான் இருக்கு; அதை உணர்ந்து, மனித உணர்வுக்கும் உயிருக்கு மதிப்பும் அளிக்கும் வண்ணம் செயல்படுவதில் தான் தீவிரம் இருக்க வேண்டும்.