சனி, 12 நவம்பர், 2011

நண்பன்டா !!!!!!!


நண்பன்டா !!!!!!!

தொலைக் காட்சியில்  டாக்டர் கமலாசெல்வராஜ் அவர்களின் பேட்டியை சுவாரசியமாக முகுந்த் பார்த்துக் கொண்டிருந்தான். முதன்  முதலாக தன்னால் உருவாக்கப் பட்ட ,  சோதனைக் குழாய் மூலம் பிறந்தக் குழந்தையைப் பற்றி மிகவும் பூரிப்புடனும், பெருமையுடனும் இன்று தான் நடந்தது போல் கூறிக் கொண்டிருந்தார். முதல் காதல், முத்தம், வேலை,சம்பளம், என்று எதையுமே மறக்க முடியாதல்லவா?  அதைக் கேட்க கேட்க முகுந்திற்கு தன் உயிர்த் தோழன் கிருபாவின் நினைவு தான் வந்தது. நட்புக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்வார்கள், ஆனால் உண்மையில்  கொடுத்தவன் இந்த முகுந்தன். பேட்டியின் நடுவே தன் மனைவி பூமாவின் முகத்தை அடிக்கடி  நோக்கினான். அவளுள் உறுத்திக் கொண்டிருக்கும் விஷயத்தை தெளிவு படுத்த வேண்டிய தருணம் இது என்பதை உணர்ந்தான். அவளை அழைத்து முகுந்தன் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான். அதைக்  கேட்ககேட்க பூமா ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றாள். இப்படியும் ஒரு நட்பா என்று வியந்தாள். 

முகுந்தும், கிருபாவும் கல்லூரியில் சேர்ந்த  முதல் நாள் தான் ஒருவரை ஒருவர் முதலாக சந்தித்துக் கொண்டது. என்னக் காரணமோ, பார்த்த உடனே இருவருக்கும் பிடித்து விட்டது. கிருபாவின் அமைதியான சிரித்த முகமா, இல்லை முகுந்தின் குழி விழுந்த கன்னமா?  எதுவோ அன்று முதல் இருவரும் இணைப் பிரியா நண்பர்களானார்கள். இருவர் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் எல்லாப் பொறுப்பையும் ஏற்று நல்லபடியாக முடித்து தருவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. வீட்டில் உள்ளவர் எல்லோருக்கும் இவர்களின் நட்பு பற்றி பெருமை யாக இருந்தாலும் கடைசி வரை நீடிக்க வேண்டுமே என்ற கவலையும் கூடவே வரும். பாதி நட்பு திருமணத்திற்கு பிறகு தொடர்வதில் சிக்கல் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இரண்டு ஆண்கள் ஒத்துப் போவது போல், பெண்கள் ஒத்துப் போவது கொஞ்சம் அரிது தான்.

இருவருக்கும் எந்த விஷயத்திலும் மனக் கசப்போ, கருத்து
 வேறுபாடோ வந்தது இல்லை. பண விஷயத்திலும், ஒருவர் குடும்பத்திற்கு ஒருவர் செலவு செய்தாலும் ஏன், எதற்கு என்று கேட்க மாட்டார்கள். இதில் மற்றவர்கள் தலையிடையும் அனுமதிபதில்லை. திருமண விஷயத்தை  இருவரும் மிகவும் கவனமாக கையாள நினைத்தார்கள். தங்கள் நட்பை மனைவி, இயல்பாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினர். பலவந்தத்தினால் வருமே ஆனால் அதில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு.
க்ருபாவிற்கும் கீர்தனாவிற்கும் மூன்று வருடப் பழக்கம். முகுந்திற்கு மட்டும் இவர்களின் பழக்கம் தெரியும். கீர்த்தனா  முதலில் இவர்களின் நட்பை சாதரணமாக தான் நினைத்தாள். போகப் போக நட்பின் ஆழத்தை புரிந்துக் கொண்டு பக்க பலமாக இருந்தாள். முகுந்தும், கிருபாவும் தங்கள் திருமணம் சேர்ந்து நடக்க விருப்பப் பட்டாலும், முடியாமல் கீர்த்தனாவின் வீட்டு சுழலால், உடனே செய்து கொள்ள வேண்டியதாகிவிட்டது. கிருபாவின்  திருமண வாழ்கை நாளொரு காதலும், பொழுதொரு ஊடலுமாக, சந்தோஷமாக இருந்தது. கிருபாவின் பெற்றோர்களும் அவர்களின் தனிமையின்  அவசியம் புரிந்து தங்கள் மகளிடம் சிறுது காலம் கழிக்க சென்றனர்.முகுந்தும் எப்போதும் போல் வந்து போய்க் கொண்டிருந்தான். அவர்கள் முவரும் சேர்ந்தால் அங்கு கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை. வேலை விஷயமாக கிருபா 3 ,4 நாட்கள் வெளியூர் போனாலும் முகுந்த் வீட்டிற்கு வருவது தவறாது. வழக்கம் போல சில பேர் ஏதேனும் பின்னாடி பேசினாலும், அது பற்றி கவலைப்  படாமல் இவர்கள் நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

அன்று அலுவலக வேலையாக கிருபா தன் நண்பனுடன் வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது எதிபாரவிதமாக லாரி மோதி விபத்தில் தூக்கி எறியப் பட்டான். நல்ல வேளையாக அருகில் உள்ளவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். முகுந்துக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. அதிஷ்டவசமாக  பெரிய வெளிக் காயம் எதுவும் இல்லை.முகுந்த் கூடவே இருந்து கீர்தனாவிற்கும் தைரியம் சொல்லி, தேவையான எல்லாம் செய்து கிருபா நன்றாக தேறும் வரை உடன் இருந்தான். ஆனால் இந்த விபத்து இரு நண்பர்களின் வாழ்வை புரட்டிப் போட்டது என்றால் மிகை ஆகாது.
விபத்திற்கு பிறகு கிருபா எப்போதும் போல் இல்லை என்பதை முகுந்த் உணர்ந்தான். கண்டிப்பாக அவனை வாட்டிக் கொண்டிருப்பது  சாதாரண விஷயம் இல்லை என்று மட்டும் புரிந்தது. அவனாக சொல்லட்டும்  என்று காத்திருந்தான். கிருபா தன் மனதிற்குள் ஒரு பட்டி மன்றமே நடத்தி, தீர்வுக்கு வந்து முகுந்தை நாடிச் சென்றான். கிருபா,"முகுந்த், நான் இப்போக் கேட்கும் இந்த உதவியை முழு மனதோடு எந்தவித மறுப்பும் இல்லாமல் செய்ய வேண்டும், சரியா?".முகுந்த்," ஏண்டா இப்படி, என்ன வேணும் கேளு; ஏன் இவ்வளவு தயக்கம்." "முகுந்த், எனக்கு நடந்த விபத்தில் நான் இழக்க கூடாததை இழந்து விட்டேன்; என்னால் இனி கீர்த்தனாவிற்கு ஒரு குழந்தையை தரும் தகுதிக் கிடையாது."என்றான். "ஐயையோ என்னக் கொடுமை இது!!" "ஆமாம், என்னாலும் தான் தாங்க முடியவில்லை; அதற்காக இப்படியே விட்டு விட முடியாது; உனக்கேத் தெரியும் கீர்த்தனவிற்கு குழந்தை என்றால் எவ்வளவு உயிர் என்று; தாய்மையை எவ்வளவு விரும்புபவள் ; என்பொருட்டு அவள் அந்த அனுபவத்தை இழக்கக்  கூடாது." முகுந்த்,"கண்டிப்பாக. அப்போ நீங்கள் குழந்தையை தத்தெடுப்பது பற்றி யோசிக்கலாமே, இப்போது இதல்லாம் பெரிய பிரச்சனை இல்லை." என்றான் முகுந்த். கிருபா,"இல்லை குழந்தை சுமக்கும் அனுபவத்தை அவள் பெற வேண்டும்," முகுந்த்,"நீ என்ன சொல்ல வர எனக்குப் புரியலே" கிருபா,"நீ...உன்னுடைய விந்தை எங்களுக்கு தானமாக தர வேண்டும்; உன் மாதிரி ஒரு குழந்தையை பெற நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் "என்றான். முகுந்த்,"ஏய் நீ தெரிந்து தான் பேசுகிறாயா? கீர்த்தனா இதை எப்படிப் பார்ப்பாள் என்று யோசித்தாயா "? கிருபா,"அதைப் பற்றி நீ கவலைப் படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றான்.

விஷயம் கேள்விப் பட்டு கீர்த்தனா கட்டுப் படுத்த முடியாமல் அழுதாள். கிருபா அவளிடம் இதையே நினைத்து கலங்காமல் அடுத்து செய்ய வேண்டியதையும், அது விஷயமாக தான் எடுத்திருக்கும் முடிவையும் கூறினான். அதிர்ச்சி அடைந்த கீர்த்தனாவை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி சம்மதிக்க வைத்தான். அதற்கு பின் மருத்துவர் யோசனை படி விஷயம் வேகமாகவும்,மும்மரமகவும் நடக்க ஆரம்பித்தது. வீடு, தங்கம், விலைஉயர்ந்த பொருட்கள் இதையெல்லாம் வாங்கும் போது தான் சந்தோசம். ஆனால் அன்பு, பாசம், நட்பு, கல்வி, இதையல்லாம் கொடுப்பதில் தான் அதிக சந்தோசம். இதை உணர்வு பூர்வமாக உணர்ந்த முகுந்த் மிகவும் மகிழ்ந்தான். இதற்கு நடுவில் முகுந்திற்கும் கல்யாணம் நிச்சயமாகியது. பூமாவும், கீர்த்தனாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆனதால் இவர்களின் நட்பு மேலும் பலமானது.
கீர்த்தனாவிற்கு, 2,3 சோதனைக்குப் பிறகு பலன் கிடைத்தது. முகுந்த் திருமணம் போது அவளுக்கு மூன்று மாதம். எல்லோரும் மகிழ்ச்சியல் திளைத்தனர். இவர்களின் அதீத நட்பைப் பற்றி பூமாவிடம் சிலர் தவறாகப் பேசினாலும் அதைப் பொருட் படுத்தாமல்,சந்தோஷமாக வளைய வந்தாள். இவர்களின் நட்பு நாளுக்கு நாள் இறுக்கமானது. குழந்தை பேருக்கு கீர்த்தனா பெற்றோரிடம் சென்றாள்.


குழந்தை பிறந்து மூன்று மாதம் கழித்து கீர்த்தனா கிருபாவிடம் வந்து  சேர்ந்தாள். குழந்தை வளர வளர குழி விழுந்த கன்னமும், கண்களும், நிறைய முகுந்தின் ஜாடையுடன் ஒத்து போவது பற்றி, சுற்றி இருப்போர் பலவிதமாக பேச ஆரம்பித்தனர். அதைப் பற்றி நண்பர்கள் கவலைப் படாவிட்டாலும், பூமாவிற்கு காரணம் விளங்கவில்லை. சந்தேகம் இல்லாவிட்டாலும், குழப்பத்துடனே வளைய வந்தாள். இன்னும் கொஞ்ச நாளில் வரும், குழந்தையின்  முதல் பிறந்த நாள் ஏற்பாட்டில் முழமையாக ஈடு பட முடியவில்லை. அப்போது தான் முகுந்த் தங்கள் மூவருக்கு மட்டும் தெரிந்த   ரகசியம் பூமவிற்கும் தெரிய வேண்டும் என்று உணர்ந்தான். அவளிடம் ஆரம்பம் முதல் என்ன நடந்தது என்பதைக் கூற தொடங்கினான். இப்படி ஒரு உன்னதமான நட்பை நினைத்து பூரித்தவள், தன் கணவனை பெருமையுடன் நோக்கினாள். மனம் லேசாகிப் போக, உற்சாகமாக விழாவிற்கான ஏற்பாட்டினைக் கவனிக்கத் தொடங்கினாள்.