வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஜீவனாம்சம் !!! கணவனுக்கும் !!!!

பெண்களே உஷார்!!  இன்றையத் தலை முறை  போய்க் கொண்டிருக்கும் வேகம் தான் நமக்குள் "ஏன் கணவன் ஜீவனாம்சம் கேட்க  கூடாது " என்ற கேள்வியை எழுப்புகிறது.  திருமணம், என்பதின் அருமை, மதிப்பு தெரியாமல், தங்கள் தனித்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் அது ஒரு தடை என்றே சிலப் பெண்கள் நினைக்கிறார்கள். திருமண பந்தத்திற்கு ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது மட்டுமே போதாது. எட்டு பத்து வருடங்கள் காதலித்தவர்கள் கூட மணமான இரண்டே வருடத்தில் விவாகரத்து கோருகின்றனர்; ஏன்? அங்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வருவதில்லை; தவிர, பணத்திற்கோ, மற்ற தேவைக்கோ முற்றிலும் கணவனை சார்ந்து இருக்கும் அவசியம் இப்போது இருப்பதில்லை. ஏனென்றால்  சில இடங்களில் கணவனை விட மனைவி அதிகம் சம்பாதிப்பதே!

இன்று  பலதரப்பட்ட  உணவு வகைகள் கிடைப்பது போல், வாழ்கை முறையிலும் பலவிதங்களைப் பார்க்கின்றனர். இந்தியர்களின் வாழ்கை  முறை பொதுவாக குடுபத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும். மேலை நாட்டவர் ஆரம்பம் முதலே உறவுகளுக்கு ஒரு எல்லை வைத்துக் கொண்டே வாழ்பவர்கள்;  ஒரு திருமணம் முறிந்தாலும், வேறு துணையைத் தேடிப் போவதில் பிரச்சனை இருபதில்லை. திருமணமே ஆகாமல் தனித்து வாழவும் சமுக அமைப்பு துணை புரிகிறது. 

இங்கு, மேல்தட்டு மக்கள் பணப் பிரச்சனை இல்லாததால், திருமண பந்தத்தில் நுழைந்து, பொறுப்பையும், கடமையையும் ஏற்றுக் கொள்ளவது அவசியமில்லை என்று நினைகின்றனர். அதையே நடுத்தர, மேல்நடுத்தர வர்கத்தினர் பின்பற்ற தொடங்கி உள்ளனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தனிமையை தாங்கிக் கொள்வது முடியாத விஷயமாகி விடுகிறது. துணையின் தேவையும் உறவுகளின் அருமையும் அப்போது தான் புரிய ஆரம்பிக்கும்.

சிலப் பெண்கள், தாங்கள் அதிகம் சம்பாதிப்பதால் துணை இல்லாமலே வாழ முடியும் என்று தப்புக் கணக்கு போடுவதால் விவாகரத்தும் கூடி வருகிறது.   பேசி தீர்க்க பட வேண்டிய சாதாரண சிறு விஷயங்கள் கூட பெரிதாக்கப்  படுகிறது. துரதிஷ்டவசமாக சில பெற்றோர்களே இதற்கு துணை போகின்றனர்.

சேர்ந்து கொஞ்ச காலம் வாழ்ந்து பிறகு திருமணம் பற்றி முடிவு செய்வது என்பது, நம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் விஷயம் அல்ல. என்னதான் பெண்கள் மேல்நாட்டுக் கலாச்சாரத்தை விரும்பினாலும், அதுவே சில சமயம் அவர்களுக்கு எதிராக அமைந்து விடுகிறது. நம் பெண்களுக்கே  உண்டான சில அடிப்படை பண்புகள் மாற கூடாது. பல நாட்டு உணவு வகைகளை வேண்டுமானால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்; ஆனால் அதே போல் வாழ்கை முறையையும் பின்பற்ற நினைப்பது தான் முட்டாள் தனம். அந்தந்த நாட்டு சீதோஷ்ணதிற்கேற்ப உடைகள், உணவு பழக்கம் எல்லாம் இருக்கும் போது, அதை விடுத்து நமக்கு பிடித்ததை செய்தால் நஷ்டம் நமக்கே!

இன்றைய பெண்களுக்கு எந்த விதமான வாழ்கை முறையை தேர்ந்தெடுப்பது என்பதில் தான் அதிக குழப்பம்; சில வாழ்கை முறையை மேலோட்டமாக, அதில் இருக்கும் சுகங்களை மட்டுமே பார்த்து, பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், பக்குவம் இல்லாத முடிவுகளால் சந்தோஷத்தை இழக்கின்றனர். பெண்களிடம் சகிப்புத் தன்மை குறைத்து, சுதந்திரத் தன்மை அதிகம் காணப்படுகிறது. விவாகரத்து கூடுவதற்கு இதுவும் ஒரு காரணம். இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவது குழந்தைகளே!!

தான் மணந்தவளுடன் நீண்ட சந்தோஷ வாழ்கை வாழ நினைக்கும் கணவர்களுக்கு சிலப் பெண்களின் இத்தகைய  மனப் போக்கினால் தங்கள் வாழ்கையையே தொலைக்க நேருகிறது. மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும்  ஆளாகிறார்கள். போகிறப் போக்கைப் பார்த்தால், கணவன்களும் மனைவி இடமிருந்து ஜீவனாம்சம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை !!!