parents story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
parents story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 மார்ச், 2012

தாய்மைக்கு பூட்டா!!



இன்றைய உலகில் எவ்வளவுக்கு எவ்வளவு அறிவியலும் தொழில் நுட்பமும் பெருகி உள்ளதோ அதே அளவு சமுக விரோத செயலும் கொடுமைகளும் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன.அது வளர்ந்த  நாடானாலும் சரி, நம் போல் வளர்ந்துக் கொண்டிருக்கும் நாடும் விதிவிலக்கல்ல; இதற்கு காரணம் அந்தந்த சமுதாயத்தைத் தான் கூற முடியும். சமுதாயம்   என்பது தனிப் பட்ட அமைப்பு அல்ல; அங்கு வாழும் மக்களைத் தான் குறிக்கும். நல்லதிர்கான பலனை அனுபவிப்பது  போல் சமுக விரோத செயலை தடுப்பதற்கான பொறுப்பும் அங்குள்ள  மக்களின் கையில் தான் உள்ளது. உதாரணமாக இன்று நம் நாட்டை எடுத்துக் கொள்வோம்; சமுக விரோத செயல்களோடு, கொலை, கொள்ளை கற்பழிப்பு, திருட்டு போன்ற மனிதாபமற்ற செயல்கள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது .அதுவும் இதில் அதிகம் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளம் வயதினரே என்று அறியும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதற்கு பணத்தேவை அதிகரித்திருப்பது ஒரு காரணமாக கூறப் பட்டாலும், இன்னொருக் கோணத்தையும் பார்க்க வேண்டி உள்ளது; குறிப்பாக நம் இந்தியாவை பொறுத்த வரை .

முன்பும் நம் நாட்டை பொறுத்தவரை இத் தகைய செயல்கள் குறைந்த விழுக்காடே இருந்து வந்தது; அதுவும் வறுமையில் வாடுபவர்களாலும், பணத்தாசையில் இருந்தவர்களால் மட்டுமே அதிகம் நடத்தப் பட்டு வந்தது. ஆனால் இப்போது படித்தவர்களும் ,நல்ல நிலையில் இருப்பவர்களும் கூட இச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மூளையை நல்ல வழிப்  படுத்தாமல் குறுக்கு வழிலும் பிறரைக் காயப் படுத்தியும் குறுகியக் காலத்தில் முன்னுக்கு வரவே ஆர்வமாக இருக்கின்றனர். அது மாதிரி செய்வதில் ஒரு குற்ற உணர்வு கூட வருவதில்லை. இதன் காரணம் குழந்தை வளர்ப்பில் ஒரு பெண்ணின் அதாவது தாய்மையின் பங்கு குறைந்து வருவதனால் கூட இருக்கலாம்.ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் தாய் என்பவளின் பங்கு மிகவும் அவசியம் என்பது எனது தாழ்மையானக் கருத்து. சமுதாயம் என்பது வீட்டில் இருந்து தான் ஆரம்பமாகிறது.ஒரு மனிதனை ஒழுக்கமான நேர்மையான மதிப்புடையவனாக  அங்கீகரிக்க கூடிய தகுதியை தாயின் வளர்ப்பு முறை பெற்று தர முடியும். இன்று தாயன்பு முழுவதும் ஒரு சேரக் கிடைக்காமல் ரேஷன் முறையில் தான் கிடைக்கிறது. படிப்பு, வேலை என்று பொறுப்புக்களை பெருக்கிக் கொண்டதால் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது தான் வருதத்திற்குரியது. பெண்களின் படிப்பிற்கு முன்பு அதிக முக்கியத்துவம் இருந்ததில்லை; ஆனால் இப்போது அதிகம் படித்து பல முன்னேற்றங்களை காண்பது உண்மையிலே பெருமை பட வேண்டிய ஒன்று.

அதேசமயம், படித்தால் கண்டிப்பாக வேலைப் பார்க்க வேண்டும், இல்லை என்றால் எல்லாமே வீண் என்று நினைக்கும் பிடிவாத மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்;படிப்பு என்பது அறிவை விருத்தி செய்துக் கொள்ளவும்,சரியானக் கோணத்தில் அணுகவும் ,மனப் பக்குவத்தை பெறவும் துணை புரிகிறது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். குழந்தை வளர்ப்பில் நம் நாட்டை பொறுத்த வரை பெரும் பங்கு அம்மாவிற்கு தான்; நாம் ;தந்தையை விட தாய்க்கு தான் அதிக மதிப்பும் மரியாதையும் அளித்து வருகிறோம்; தந்தையால் சீர் கெட்டக் கெடுக்கப் பட்டக் குழந்தைகளை பற்றிக் கூட கேள்வி பட்டிருக்கோம்; பார்த்திருக்கிறோம்; ஆனால் தாயால் சீர்கெட்ட குழந்தைகளை பற்றிக் கேள்விக் கூட பட முடியாது;  பெண்களுக்கு தாய்மை என்பது இயற்கையே தந்த வரம்; எல்லாக் குழந்தைக்கும் முதல் ஆசான் தாய் தான். குழந்தைக் கருவில் இருக்கும் போதே ஆரம்பிக்கும் உன்னதமான உறவு இது என்றால் மிகையாகது.

தாய்மை அடைந்த பெண்ணின் எண்ணங்கள்,செயல்பாடு எல்லாம் அப்போதிலிருந்தே வயிற்றில் இருக்கும் சிசுவுடன் பரிமாற்றம் பெறத்  தொடங்குகிறது. நல்ல மனிதனின் தொடக்கமும் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. உள்ளமும் செயலும் சந்தோஷமாக இருப்பதின் பிரதிபலிப்பை குழந்தையிடம் காண முடியும். தாய்மைக் காலமும், பிறந்த பின் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை தாயின்அருகாமையும், அன்பும் அரவணைப்பும் குழந்தைக்கு கண்டிப்பாகத் தேவை. அது தான் நல்ல மனிதனாக உருவெடுக்க துணை புரியும் பலமான அஸ்திவாரம். ஆனால் இன்றைய பெண்கள் வேலைக்கு போகும் கட்டாயத்தால் எந்நேரமும் வேலைபளு, மன அழுத்தம்,பரபரப்பு,கஷ்ட்டங்கள் என்றே இருப்பதால் தாய்மையை சரியாக சந்தோஷமாக அனுபவிக்க கூட முடிவதில்லை; வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் பிறந்த பிறகும் அதற்கான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. குழந்தை பிறந்தவுடன் ஒரு ஆயாவை அமர்த்தி விட்டால் பொறுப்பு தீர்ந்தது என்று நினைக்கிறார்கள்; சம்பளத்திற்கு வேலை பார்பவர்களிடம் இருந்து உண்மையான அன்பும்,அரவணைப்பும் எப்படிக் கிடைக்கும்? குழந்தைகளுக்கு அந்தந்த வயதில்தாயின் மூலம்  கிடைக்க  வேண்டியது ,காலத்தின் கட்டாயம் என்ற பெயரில் மறுக்க படுவது நியாயமில்லை; தேவைகளும் வசதிகளும் நாமாகவே ஏற்படுத்திக் கொண்டது தான்; எப்போது எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்; ஏன் அந்தக் காலத்தில் 4,5 குழந்தைகள் இருந்தும் கூட நல்ல ஆரோக்கியமான ,வசதியையும் கொடுத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வளர்க்கவில்லையா ?அப்போது ஒரே வீடாக , மற்ற எரிபொருள், வாகன,மின்சார ,உணவு எல்லாம் ஒன்றாக பொதுவாக இருந்தது. ஆனால் இன்று குடும்பத்தில்  நான்கு பேர் இருந்தாலும் தனித் தனி வீடு,வாகனம் என்று எல்லாம் பிரிக்கப் பட்டுவிட்டது; அது தான் தேவை கூடுகிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த பட்சம் குழந்தைகள் வளர்பதில்லாவது  பெண்கள் தங்கள் பொறுப்பு எத்தகையது என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் குறிப்பிட்டக் காலம் வரை தாயின் அரவணைப்பு அவசியம். ஒரு தாயால் தான் அன்பு நேர்மை உறவுகளின் மேன்மை ஏன் எல்லாவற்றையும் சரியானப் பார்வையில் புரிய வைத்து வளர்க முடியும். சில ஆண்கள் விதி விலக்காக இருக்கலாம். அதையே உதாரணமாகக் கொள்ள முடியாது. நல்ல சமுதாயம் உருவாவது இளங்குருத்துக்களின் கைகளில் தான் இருக்கு; இளங்குருத்துக்களை நல்ல விதமாக உருவாக்குவது ஒரு தாயின் கையில் தான் இருக்கு என்பதை பெண்கள் உணர வேண்டும். அதற்காக  குறுகிய காலத்திற்கு சில தியாகங்களை செய்வதில் தவறில்லை. இப்போதைய இளைய சமுதாயத்தின் விரும்பத்தகாத சில நடவடிக்கைகளின் காரணம் சிறு வயதின் வளர்ப்பு முறையின் பிரதிபலிப்பாகக் கூட இருக்கலாம்; அதைக் கருத்தில் கொண்டு பெண்கள் குழந்தை வளர்ப்பதில் தங்களை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டு நல்ல சமுதாயத்தை உருவாக்க துணை புரிய வேண்டும்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஏன் இந்தக் கொலை வெறி?



சமீபத்தில் சென்னை பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவம் மனதை உலுக்கியது மட்டுமல்லாமல் நமது மாணவ சமுதாயம் சென்றுக் கொண்டிருக்கும் பாதை பற்றிய பயத்தையும் கவலையையும் கொள்ளச் செய்கிறது. ஒரு பிரபல பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் தன சக நண்பர்களின் முன்னே தன் ஆசிரியரைக் குத்திக் கொலை செய்தான் என்ற செய்தியை படித்தப் போது, இதயம் துடிக்க மறந்து அதிர்ச்சியானது உண்மை. இதற்கான காரணம் அந்த ஆசிரியர் குறிப்பிட அந்த மாணவன் படிப்பில் சற்று பின் தங்கி இருப்பதாக குறிப்பேட்டின் மூலம் பெற்றோருக்கு தெரிவித்ததால் தான். அவர் தன கடமையை தானே செய்தார். இம்மாதிரி, மாணவன் தன் நண்பர்களையும் ஆசிரியர்களையும் சுடுவது எல்லாம் வெளி நாடுகளில் நடப்பதை தான் அதிகம் கேள்விபட்டிருக்கோம்; ஆனால் இங்குமா? நம்பவே கஷ்டமாக இருக்கிறது. இது தொடராமல் முளையிலேயே கிள்ளப் பட வேண்டும். மற்றக் கலாச்சாரம் போல் இதுவும் நம்மில் பரவுவதை அனுமதிக்க முடியாது.

இதற்கு பொறுப்பு நீயா நானா என்று விவாதம் செய்யாமல் எல்லோரும் சேர்ந்து தீர்வுக் காண முயல வேண்டும். இன்றைய ஆசிரியர்களின் நிலைமை ஒரு விதத்தில் சவாலாகத் தான் உள்ளது. எல்லாப் பள்ளித் தலைமைகளும் நூறு சதவிகித ரிசல்ட் வர வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதால் மாணவர்கள், பெற்றோர் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் இதனால் பாதிக்கப் படுகின்றனர். குறுகியக் காலத்தில் நிறைய பாடங்களை முடிக்க வேண்டிய சூழல்; அதிலும் மாணவர்களை  எப்படி நடத்த வேண்டும், கண்டிப்பு, தண்டனை எந்த அளவிற்கு இருக்கலாம் என்று நிறையக் கட்டுப்பாடுகள்; ஆசிரியர்களுக்கென்று தனி மதிப்பு நம் நாட்டில் எப்போதுமே உண்டு; இன்றும் ஆசிரியர் தினத்தை சிறப்பாகக் கொண்டாட தவறுவதில்லை; முன்பெல்லாம் அவர்களிடம் ஒரு பயம் கலந்த மரியாதையை இருந்து வந்தது; அவர்கள் நம்மைக் கண்டித்தாலோ,அறிவுரை வழங்கினாலோ சரியானக் கோணத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது; நம்மிடத்தில் அசிரியர்களுக்குண்டான அக்கறை உணரப் பட்டது. இன்று நிலைமை அப்படி இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்; ஆசிரியர்களால் நல்லெண்ணத்தில் சொல்லும் விஷயங்களை பெற்றோர் கூட புரிந்து கொள்வதில்லை; நீங்கள் எப்படி என் பிள்ளைகளைப் பற்றி சொல்லலாம் என்று சண்டைக்கு வரும் முதல் நபர் சில இடங்களில் அவர்களாகத் தான் இருக்கிறார்கள். மாணவர்கள் முன்னிலையிலே அவர்களைத் தரக் குறைவாக பேசினால் மாணவர்களுக்கு எப்படி அவர்களிடம் மதிப்பு வரும்?


அப்படியே சில ஆசிரியர்கள் ஏதேனும் கடுஞ்சொல் கூறிக் கண்டித்தால் தொலைந்தது! உடனே ஒரு தற்கொலை முயற்சி; அப்போதும் இடி வாங்குவது பரிதாபத்திற்குரிய ஆசிரியர்களே. முழு சுதந்திரத்துடன் ஆசிரியர்களை செயல் பட விட்டால் தான் ஒரு நல்ல  மாணவனை உருவாக்க முடியும். அந்த நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருத்தல் வேண்டும்.

இதில் சம பங்கு பெற்றோருக்கும் உண்டு; காலத்தின் கட்டாயத்தால் தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பணத்திற்கு குறை இல்லை; தேவையா இல்லையா என்று அறிந்துக் கொள்ளாமலே குழந்தைகள்  எந்தப் பொருளைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுக்கின்றனர். குழந்தைகள் எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை ; ஆனால் அதனாலேயே எந்தப் பொருளின் அருமையும்,பெறுமையும் தெரியாததோடு, பிடிவாதமும் வளர்கிறது. உயர் தரக்  கல்விக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நல்லப் பள்ளியிலும் சேர்க்கின்றனர்; ஆனால் அதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைப்பது தான் தவறாகி விடுகிறது. வீட்டை விட பள்ளியில் தான் அதிக நேரம் இருப்பதால் வழி   நடத்துவது அவர்கள் கடமை என்று சிலப் பெற்றோர் மெத்தனமாக இருந்து விடுகின்றனர். வேலை அழுத்தம் ஒரு புறம் இருந்தாலும் குழந்தைகளுடன் quality time ஒதுக்க வேண்டும். அதுவும் இந்த மாதிரி ஒன்பது, பத்தாம் வகுப்பிற்கு செல்லும் காலக் கட்டம் மிகவும் இக்கட்டானப் பருவம்; படிப்பினாலும் வயதிற்கே உரிய இயற்கையான மாற்றத்தினாலும் ஏற்படும் தடுமாற்றங்களை பெற்றவர்கள் தான் கவனிக்க வேண்டும். அவர்கள் படிப்பிலும் ஏன் நண்பர்கள் வட்டத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தருணம் இது. அது  மட்டுமல்லாமல் சமுக   வலை தளங்கலங்களும் அவர்களின் கவனச் சிதறல்களுக்கு ஒரு முக்கிய காரணமாகிறது. தேவையான வசதிகளையும் பொருள்களையும்  கொடுப்பதோடு நிற்காமல் அப்போது தேவைப்படும் உண்மையான தோழமை  தான் சிறப்பாக வழி நடத்த உதவும். மேற்கூறிய  சம்மவம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. ஆசிரியர்களின் பாதுகாப்புக் குறித்தே கேள்விக் குறி ஆக்கி விட்டது. பெற்றவர்கள் கொடுக்கும் சலுகைகளால் குழந்தைகளின் சகிப்புத் தன்மை குறைவதோடு  போரிடும் குணமும் காணாமல் போய்  விடுகிறது. சில சமயம் குழந்தைகளிடம் வைக்கும் அதித அன்பு அவர்களைக் கோழைகள் ஆக்குவதோடு தன்னம்பிக்கை அற்றவர்களாக்கி விடுகிறது. இந்த மாணவன் ஒன்றும் பரம்பரை குற்றவாளியோ, திட்டம் தீட்டியோ நடத்த வில்லை; அந்தக் கணத்தில் ஏற்பட்டக் கோவம், தன்னை எப்படி  குறை சொல்லலாம் என்ற அகம்பாவவுமே தான்! எதையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனோதிடம் மாணவர்களிடையே இருப்பதில்லை. பள்ளியில் நடக்கும் சிறு சிறு சம்பவங்களுக்கு கூட தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது இதைத் தான் பறை சாற்றுகிறது. எல்லாப் பக்கங்களிலும் தாக்கப் படும் ஆசிரியர்களின் நிலையும் மிகவும் பரிதாபத்திர்க்குரியவர்களே.


இன் நிலை மாற எல்லோரும் புரிந்துக் கொண்டு செயல் பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆண் பெண் ஆலோசகர்கள் அவசியம் இருத்தல் வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் ஏதேனும்   மாற்றம் தென் பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே நடவடிக்கையில் இறங்க வேண்டும். இத் தகைய சம்பவங்கள் மேலும் தொடராமல் இருப்பது நம் கையில் தான் இருக்கிறது. 

வெள்ளி, 20 ஜனவரி, 2012

விவாகரத்து - மறுபக்கம் !!!




இன்று பன்முக கலாச்சாரம் நம்மிடையே அதிகம் ஊடுருவிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதனால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் நமக்கே உரித்தான சில தனித்துவம் நிறைந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு  மறையத் தொடங்குவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். இது ஒரு  நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது. இதில் முழுவதும் நம்மை துலைத்து விடாமல்இருக்க  ஒரு எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது அவசியம் என்று தோன்றுகிறது. நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல் எந்த ஒரு விஷயத்திற்கும் இரு பாதிப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.

உதாரணத்திற்கு இன்று நம்மிடையே பெருகி வரும் அதிக விவாகரத்து. முன்பு இந்த வார்த்தைஎங்கேயோ  எப்போவோ கேட்ட குரலாகத் தான் இருந்தது; ஆனால் இப்போ அடிக்கடிக் கேட்கும் வார்த்தையாகிவிட்டது. சகிப்புத் தன்மையும் பொறுமையும் குறைந்ததை ஒருக் காரணமாகச் சொன்னாலும், சட்டத் திருத்தங்களால் இப்பொழுது எளிதில் கிடைபதால் சிலருக்கு மிகவும் சாதகமாகி விட்டது. சம்மந்த பட்ட ஆணோ, பெண்ணோ, அவரவர் தங்கள் விருப்பப்படி வேறு வாழ்க்கை துணையை தேர்வு செய்து செட்டில் ஆகி விடுகின்றனர். ஆனால் இதனால் பாதிப்பிற்கு உண்டான இன்னொரு தரப்பு பற்றி யாருமே நினைத்து பார்பதில்லை. அவர்கள் தான் சம்மந்த பட்ட ஆண் பெண்ணின் பெற்றோர்கள்! கண்டிப்பாக குழந்தைகளின் நல் வாழ்க்கை அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மனதில் ஏற்படும் அந்தக் காயத்திற்கும் பிறரின் பார்வையில் தாழ்ந்து போவதற்கும் யாரும் மருந்து போட முடியாது. எத்தனையோ கனவுகளுடன் பல மாதங்களாக பார்த்து பார்த்து பிரமாண்டமாக செய்யப் படும்  திருமணம் சில சமயங்களில் அற்பக் காரணங்களால் சில மாதங்களிலே பிரிவு வரும் போது பெற்றோர்களின் மன நிலையை சொல்ல வார்த்தைகளே இல்லை. இன்றையத் தலைமுறை அடுத்தடுத்தக் கட்டத்திற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் மனோபாவம் இருப்பதால் சுலபமாக எதையும் எதிர் கொள்ள முடிகிறது. ஆனால் பாதிப்பு அடைந்த  பெற்றோர் நிலையோ வேறு!

பொது இடங்களிலோ, திருமணத்திலோஇந்த மாதிரி சம்பவத்திற்கு பிறகு அவர்களால்  எப்போதும்  போல் சகஜமாக கலந்துக் கொள்ள முடிவதில்லை; பிறர் கேட்கும்  கேள்விகளை எதிர் நோக்கும் தைரியம்   அவர்களுக்கு இருப்பதில்லை. குடும்பத்தினரிடமும், உறவுகளிடமும் நண்பர்களிடம் , அவர்களின் மதிப்பு குறைந்து விடுகிறது; தங்களின் வளர்ப்பு சரி இல்லையோ என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் மனம் புழுங்கித்  தவிக்கிறது. இதில் கூட பிறந்தவர்கள் இருந்தால் அவர்களின் திருமணம் என்ற கட்டம் வரும் போது எதிர் பார்ப்பது போல் அவ்வளவு சுலபமாக அமைவதில்லை. விவாகரத்து என்ற சொல் அந்தக் குடும்பத்துடன் ஒட்டிக் கொண்டு   ஒரு சுனாமி போன்ற பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. விவாகரத்து என்ற ஒன்று இல்லாமலே இருந்தால், சகிப்புத் தன்மையும், வாழ்க்கையின் அருமையும் புரியுமோ என்று நினைக்கும் அளவிற்கு பெற்றோர் மனம் விரும்புகிறது;

ஏன் என்றால் திருமணம் என்ற ஒன்று  நடக்கும் போதே இது சரியாக அமைய விட்டால் இருக்கவே இருக்கு இன்னொன்று என்ற எண்ணத்துடன்  தான் சிலர் மணம் புரிகின்றனர். ரொம்ப சுலபமாகவே விலக்கும் கிடைபதால் வாழ்க்கையின் அருமை எதில் உள்ளது என்பதை புரிந்துக் கொள்ள தவறி விடுகின்றனர். இதில் அதிகம் பாதிப்பிற்கு ஆளாவது பெற்றோர்களே என்பதை அறிவதில்லை. எந்த விஷயத்திற்கும் ஒரு கட்டுப்பாடு அவசியம்; இல்லாமல் போனால் அதன் மதிப்பை உணராமலே தவற விடும் வாய்ப்பு அதிகரித்து விடும். புது கலாச்சார  விஷயங்களை வரவேற்கலாம்; அதற்கு முதலில் நம்மிடம் உள்ள நல்லக் கலாச்சரங்களை உணர்ந்து மதிக்க வேண்டும். திருமணம் என்ற பந்தத்தை தொலை நோக்கு பார்வையோடு பார்த்தால் தான் அதன் அருமையை அனுபவித்து  உணர்ந்து ரசிக்க முடியும்.